Home இந்தியா “எனது மகளை விட்டுவிட்டு மருத்துவர்கள் ஹேமமாலினியை மட்டும் கூட்டிச் சென்றனர்” – குழந்தையின் தந்தை பேட்டி!

“எனது மகளை விட்டுவிட்டு மருத்துவர்கள் ஹேமமாலினியை மட்டும் கூட்டிச் சென்றனர்” – குழந்தையின் தந்தை பேட்டி!

465
0
SHARE
Ad

hema-malini_ஜெய்ப்பூர், ஜூலை 4 – “எனது மகள், காரில் அவளது தாயின் மடியிலேயே உயிர்விட்டாள். நாங்கள் கீழே விழுந்து கிடக்கையில், மருத்துவர்கள் ஹேமமாலினியை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்” என்று இறந்த குழந்தை சோனத்தின் தந்தை கண்ணீர் மல்கப் பத்திரிக்கைகளுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

நடிகை ஹேமமாலினி, நேற்று முன்தினம் இரவு தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 60 கிமீ தொலைவில் இருக்கும் தவுசா என்ற இடத்திற்கு வந்து கொண்டிருந்தார். அவரது காரை ஹேமமாலினியின் ஓட்டுனர் ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிரே வந்த காருடன் ஹேமமாலினியின் கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் எதிரே வந்த காரில் இருந்த சோனம் என்ற பெண் குழந்தை பலியானது.

இந்த விபத்திற்கு ஹேமமாலினியின் கார் வேகமாக வந்ததது தான் காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து அக்குழந்தையின் தந்தை ஹனுமான் மகாஜன் கூறுகையில், “என் குழந்தை அவளது தாயின் மடியிலேயே உயிர்விட்டாள். குழந்தை இறந்த துக்கத்தில் இருந்து என மனைவியால் இன்னும் மீண்டு வர முடியவில்லை.”

#TamilSchoolmychoice

“அவளை மருத்துவமனையின் அவசரப் பிரிவில் அனுமதித்துள்ளோம். நாங்கள் அடிபட்டுக் கீழே விழுந்து கிடைக்கையில், அனைவரும் ஹேமமாலினியைப் பாதுகாக்கவே நினைத்தனர். மருத்துவர்கள் ஹேமமாலினியை உடனடியாக அழைத்துச் சென்றனர். ஆனால் நாங்கள் 25 நிமிடங்களாகக் கீழே தான் விழுந்து கிடந்தோம். ஹேமமாலினியுடன் எனது மகளையும் அழைத்துச் சென்று இருந்தால், அவளைக் காப்பாற்றி இருக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஹேமமாலினி, சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.