Home நாடு மஇகா வேட்புமனுத் தாக்கல் – மேல்முறையீடு கால அவகாசத்தால்  கட்சிக்கு திரும்பிய முக்கியத் தலைவர்கள்!

மஇகா வேட்புமனுத் தாக்கல் – மேல்முறையீடு கால அவகாசத்தால்  கட்சிக்கு திரும்பிய முக்கியத் தலைவர்கள்!

387
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 23 – கடந்த ஜூலை 10, 11, 12ஆம் தேதிகளில் நடந்தேறிய மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்களில் பல மஇகா கிளைகள் கலந்து கொள்ளத் தவறிய சூழ்நிலையைத் தொடர்ந்து, அந்தக் கிளைகள் மேல்முறையீடு செய்ய மஇகா தலைமையகம் ஜூலை 19 வரை கூடுதல் கால அவகாசம் வழங்கியிருந்தது.

MIC-logoசம்பந்தப்பட்ட ஆவணங்கள் உரிய காலத்தில் கிடைக்காதது, அஞ்சல் சேவையில் முகவரி மாற்றங்களால் ஆவணங்கள் கிடைக்காதது, அஞ்சல் சேவையில் காணாமல் போனது போன்ற சில நியாயமான காரணங்களால், பல கிளைகள் இந்த வேட்புமனுத் தாக்கல்களில் பங்கு பெற இயலவில்லை.

அதோடு வேட்புமனுத் தாக்கல்கள் முடிவடைந்த ஜூலை 12ஆம் தேதிக்கு மறுநாள் ஜூலை 13ஆம் தேதிதான் மேல்முறையீட்டு நீதிமன்றம் மஇகா-சங்கப் பதிவகம் தொடர்பான வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய காரணத்தாலும், பல கிளைகள் குழப்பத்தால் ஒதுங்கியிருந்து விட்டன.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து மஇகா கிளைகள் ஜூலை 19ஆம் தேதி வரை மீண்டும் வேட்புமனுத்தாக்கல்களில் கலந்து கொள்ள மேல்முறையீடு செய்யலாம் என மஇகா தலைமையகம்அறிவித்திருந்தது.

இந்த முடிவால் பழனிவேல் தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த பல மஇகா கிளைகளும், சில முக்கிய தலைவர்களும் இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமைக்கு ஆதரவாக மஇகா தலைமையகத்திற்கு வேட்புமனுத் தாக்கல்களில் கலந்து கொள்ள மேல்முறையீடு செய்திருப்பதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

முருகேசன், பழனியப்பன், குமார் அம்மான், ரண்டீர் வேட்புமனுத் தாக்கல்

மேல்முறையீட்டுக்கான கால அவகாசத்தைப் பயன்படுத்தி பழனிவேல் தரப்பில் தீவிரமாக இயங்கி வந்த பழனிவேலுவின் முன்னாள் அரசியல் செயலாளர் டத்தோ பழனியப்பன், முன்னாள் மத்திய செயலவை உறுப்பினரும் ஜோகூர் மஇகாவின் பொருளாளருமான ரண்டீர் சிங், முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் குமார் அம்மான் ஆகியோரும் தங்களின் மஇகா கிளைகள் வேட்புமனுத் தாக்கல் செய்ய மேல்முறையீடு செய்திருப்பதாக மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், பேராக் மாநிலத் தலைவராக பழனிவேலுவால் நியமிக்கப்பட்டு, அவரது முன்னணி ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த டான்ஸ்ரீ ராமசாமியும் வேட்புமனுத் தாக்கல் செய்ய மேல் முறையீடு செய்துள்ளதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.