Home Featured நாடு “என்னைக் கைது செய்வதுதான் உங்களுக்கிடப்பட்ட முதல் உத்தரவா?” – சாஹிட்டுக்கு மொகிதீன் கேள்வி

“என்னைக் கைது செய்வதுதான் உங்களுக்கிடப்பட்ட முதல் உத்தரவா?” – சாஹிட்டுக்கு மொகிதீன் கேள்வி

561
0
SHARE
Ad

குளுவாங், ஆகஸ்ட் 2 – இன்று நடைபெற்ற குளுவாங் அம்னோவின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் “புதிய துணைப் பிரதமர் என்ற முறையில் உங்களுக்கு இடப்பட்டிருக்கும் முதல் உத்தரவு என்னைக் கைது செய்வதுதானா?” என புதிய துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹாமிட்டை நோக்கித் தான் கேட்டதாக தெரிவித்தார்.

ஆனால் அது வதந்தி என சாஹிட் தன்னிடம் கூறியதாகவும் மொகிதீன் மேலும் கூறினார்.

Tan-Sri-Muhyiddin-Yassin2-1தான் கைது செய்யப்படலாம் எனப் பரவி வந்த வதந்தியைத் தனது மகள் தனக்கு தெரிவித்ததைத் தொடர்ந்து, சாஹிட்டைத் தொடர்பு கொண்டு, செராஸ் அம்னோ கூட்டத்தில் 1எம்டிபி விவகாரம் குறித்து நான் ஆற்றிய உரைக்காக என்னைக் கைது செய்யப் போகிறீர்களா என்று அவரைக் கேட்டேன் என்று மொகிதீன் தனது உரையில் கூறினார்.

#TamilSchoolmychoice

“புதிய துணைப் பிரதமர் என்ற முறையில் முன்னாள் துணைப் பிரதமரை கைது செய்வதுதான் உங்களுக்கு இடப்பட்டிருக்கும் முதல் உத்தரவா? என்னைத் தண்டிக்கப் போகிறீர்களா? என்ன தவறு செய்தேன் நான்? நான் இந்த வதந்திகளை நம்பவில்லை. ஆனால் எனது மனைவி மிகுந்த தவிப்புடன் இருக்கின்றார்” என்றும் சாஹிட்டிடம் கூறியதாக மொகிதீன் தெரிவித்தார்.

ஆனால், 10-15 நிமிடங்களுக்குப் பின்னர் என்னை மீண்டும் அழைத்த சாஹிட், அவை வெறும் வதந்திகள்தான், நம்பாதீர்கள் என உறுதி கூறியதாகவும் இன்று நீங்கள் நிம்மதியாகத் தூங்கலாம் டான்ஸ்ரீ என்று அவர் தெரிவித்ததாகவும் மொகிதீன் கூறினார். “ஆனாலும் அன்றிரவு என்னால் தூங்க முடியவில்லை” என்று சிரிப்புக்கிடையே மொகிதீன் குறிப்பிட்டார்.