Home தொழில் நுட்பம் எச்சரிக்கை: எம்எச்17 பேரிடரை சாதகமாக்கிக் கொள்ளும் தகவல் திருடர்கள்! 

எச்சரிக்கை: எம்எச்17 பேரிடரை சாதகமாக்கிக் கொள்ளும் தகவல் திருடர்கள்! 

418
0
SHARE
Ad

missile-fired-pro-russian-militants-malaysian-airliner

கோலாலம்பூர், ஜூலை 23 – எம்எச் 17 விமானம் கடந்த வாரம் வியாழக்கிழமை (ஜூலை 17) கிழக்கு உக்ரைன் பகுதியில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை கொண்டு தாக்கி வீழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் விமானத்தில் பயணம் செய்த 298 பயணிகளும் பரிதாபமாக பலியாகினர்.

உலக அளவில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொழில்நுட்ப ரீதியா தகவல் திருட்டை நடத்தும் கும்பல்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி நட்பு ஊடகங்களான ‘பேஸ்புக்’ (Facebook) மற்றும் ‘டுவிட்டர்’ (Twitter) வாயிலாக தகவல் திருட்டை நடத்தி வருகின்றன.

#TamilSchoolmychoice

சமீபத்தில் பேஸ்புக்கில் பற்றி எரியும் எம்எச் 17 விமானத்தின் நேரடி படக் காட்சிகள் என்ற வாசகங்கள் அடங்கிய தொடர்புகள் பேஸ்புக் பயனர்களால் பலருக்கு பகிரப்பட்டது.

அந்த காணொளிக் காட்சிகள் கொண்ட பகிர்வை பேஸ்புக் பயனர்கள் அணுகும்பொழுது, அந்த தொடர்பு ஆபாச வலைதளங்களுக்கு பயனர்களை அவர்களுக்கு அறியாமல் இட்டு செல்கின்றது. மேலும், இதே போன்ற வாசகங்கள் கொண்ட மற்றொரு பதிவினை பயனர்கள் பயன்படுத்தும் பொழுது ஒரு சில மால்வேர் நிரல்கள் பயனர்களின் கணினிகளில் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.

இத்தகைய நிரல்களின் மூலம் தகவல் திருடர்கள், பயனர்களின் பேஸ்புக் கடவுச் சொற்கள் மற்றும் பயனர் பற்றிய விவரங்கள் உட்பட அனைத்தையும் பயனர் அனுமதியின்றி பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

இதே போன்ற தொடர்புகள் டுவிட்டர் வாயிலாகவும் பரப்பப்படுகின்றன.

பேஸ்புக்கில் இத்தகைய போலியான தொடர்புகள் நீக்கப்பட்டாலும், தகவல் திருடர்கள் தொடர்ந்து வேறு வேறு கணக்குகளில் இருந்து தொடர்ச்சியாக இத்தகைய பக்கங்களை உருவாக்கி வருகின்றனர்.

இது பற்றி  தொழில்நுட்ப நிறுவனமான  ‘ட்ரெண்ட்மைக்ரோ’  (TrendMicro) கூறுகையில், “எம்எச் 17 பற்றி போலியான பக்கங்களை தகவல் திருடர்கள் உருவாக்க முக்கிய காரணம் இணையம் வழியாக தகவல் திருட்டை ஏற்படுத்தவும், தங்கள் ஆபாச வலைத்தளங்களை பரப்பவும், இணைய போக்குவரத்தினை அதிகப்படுத்தி வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தவும் தான். அதனால் பயனர்கள் எம்எச் 17 பற்றிய இணைய தேடலில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.

பயனர்கள் ஆர்வமிகுதியில் இத்தகைய பக்கங்களைப் பயன்படுத்தி தங்கள் தகவல்களை இழக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு வருகின்றார்கள்.