Home நாடு பினாங்கிலும் உஸ்தாஸ் சாகுல் அமீட் மீது மஇகா – பிபிபி காவல் துறையில் புகார்

பினாங்கிலும் உஸ்தாஸ் சாகுல் அமீட் மீது மஇகா – பிபிபி காவல் துறையில் புகார்

522
0
SHARE
Ad

Ustaz Shahul Hamid 440 x 218ஜியோர்ஜ் டவுன், ஜூலை 30 – இந்து சமயத்தைப் பற்றி மதபோதகர் உஸ்தாஸ் சாகுல் அமீட் (படம்)  இழிவு படுத்தி பேசியதாக கோலாலம்பூரில் ம.இ.காவினர் காவல் துறையில் புகார்கள் செய்ததைப் போன்று பினாங்கு மாநிலத் தலைநகர் ஜியோர்ஜ் டவுனிலும் ம.இ.கா, பிபிபி மற்றும் இந்து சமய அரசு சார்பற்ற இயக்கங்கள் ஒன்றிணைந்து காவல் துறையில் புகார் செய்துள்ளன.

மஇகா, பிபிபி கட்சிகளின் மகளிர் மற்றும் புத்ரா பிரிவினர் மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்த சுமார் 30 பேர் கொண்ட குழுவினர் பட்டாணி சாலையில் உள்ள காவல் நிலையத்தில் சாகுல் அமீட்டுக்கு எதிராக இந்த புகாரைச் செய்தனர்.

காவல் துறையினர் சாகுல் அமீட்டின் உரை குறித்து விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் விசாரணைகள் முடியும் வரை மேற்கொண்டு அவர் எந்த உரையும் ஆற்றாமல் இருக்க அவரைத் தடை செய்ய வேண்டும் என்றும் பினாங்கு மாநில புத்ரா மஇகா தலைவர் என்.ஜி.செந்தில்நாதன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“சாகுல் அமீட் இஸ்லாம் பற்றி பேசுவதில் எந்தவித தவறும் இல்லை. ஆனால் அவர் மற்ற மதங்களைப் பற்றி தரக் குறைவாகப் பேசக் கூடாது” என்றும் செந்தில்நாதன் கூறினார்.

பினாங்கு ம.இ.கா இளைஞர் பகுதித் தலைவர் ஏ.முருகன் தாங்கள் செய்த புகார் பற்றி கூறும்போது, சாகுல் அமீட்டிடம் இருந்து மன்னிப்பு எதனையும் தாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் மீது கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கிடையில், நட்பு ஊடகங்களின் மூலமாகவும், சமூக வலைத் தளங்களின் மூலமாகவும், சாகுல் அமீட்டிற்கு எதிராக கண்டனக் குரல்களும், வாசகங்களும் ஏராளமான அளவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.