Home நாடு கோ.புண்ணியவானின் ‘செலாஞ்சார் அம்பாட்’ நாவலுக்கு 10,000 ரிங்கிட் பரிசு!

கோ.புண்ணியவானின் ‘செலாஞ்சார் அம்பாட்’ நாவலுக்கு 10,000 ரிங்கிட் பரிசு!

1759
0
SHARE
Ad

புண்ணியவான்கோ.கோலாலம்பூர், ஆகஸ்ட் 16 – மலேசிய கூட்டுறவு சங்கமான தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசு விழாவில் மலேசியாவின் பிரபல எழுத்தாளரான சுங்கைப்பட்டாணியைச் சேர்ந்த கோ.புண்ணியவான் அவர்களின் “செலாஞ்சார் அம்பாட்என்ற நாவலுக்கு 10,000 ரிங்கிட் பரிசாக வழங்கப்படவுள்ளது.

தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் புத்தகப் பரிசளிப்பு விழா வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெறும் என்று தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ சகாதேவன் தெரிவித்தார்.

இந்தப் போட்டிகளை கூட்டுறவு சங்கம் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மக்கள் எதிர்கொண்ட குடியுரிமை பிரச்சனைகள்

அம்பாட்செலாஞ்சார்

மலேசியாவின் சுதந்திரத்திற்குப் பிறகான காலகட்டத்தில், குறிப்பாக நமது இந்தியர்கள் எதிர்கொண்ட சிவப்பு அடையாள அட்டை பிரச்சனைகளை மையக்கருவாக வைத்து, தனது இளமைக் காலத்தில் தான் கண்ட அவலங்களை நினைவுகூர்ந்து, “செலாஞ்சார் அம்பாட்என்ற நாவலாக எழுதியுள்ளார் கோ.புண்ணியவான்.

சுமார் 20 நாட்களில் தான் இந்த நாவலை எழுதி முடித்துவிட்டதாகவும், அதில் வரும் பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்கள் என்றும் புண்ணியவான் நமது செல்லியல் இணையத்தளத்திற்கு அளித்த பிரத்தியேக தொலைப்பேசி உரையாடலில் தெரிவித்தார்.

மேலும், சுமார் 1500 பிரதிகள் அச்சிடப்பட்ட இந்த நாவல், தமிழ்நாட்டின் இலக்கியவாதிகள் உட்பட பலராலும் விரும்பி வாங்கப்பட்டு தற்போது 300 பிரதிகள் மட்டுமே தன்னிடம் மிச்சம் இருப்பதாகவும் புண்ணியவான் தெரிவித்தார்.

குடியுரிமை அளிக்கப்படாமல் சிவப்பு அடையாள அட்டையை வைத்துக் கொண்டு, பல இன்னல்களுக்கு ஆளான நம் தோட்டப்புற மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை அழுத்தமாக பதிவு செய்துள்ள இந்த நாவல் நிச்சயம் அனைவரும் படித்து தெரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்றும் புண்ணியவான் தெரிவித்தார்.

அன்றைய காலகட்டத்தில், சிவப்பு அடையாள அட்டை பிரச்சனையில் தானும் நேரடியாகவே பாதிக்கப்பட்டிருந்ததாகவும், எனவே அதன் பாதிப்பு என்னவென்று தனக்கு நன்றாக தெரியும் என்றும் புண்ணியவான் குறிப்பிட்டார்.

தமிழ் எழுத்துலகிற்கு கணிசமான கொடை – முனைவர் ரெ.கார்த்திகேசு

திகேசுரெ.கார்த்

கடந்த ஜூலை 13 –ம் தேதி, சுங்கைபட்டாணியிலும், ஜூலை 20-ம் தேதி பேராக் சித்தியவானிலும்,  செலாஞ்சார் அம்பாட்”  நாவல் வெளியீட்டு விழா  நடைபெற்றது. அதில் நாட்டின் பிரபல இலக்கிய ஆர்வலர்களும், எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நாவலுக்கு மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்கள் முன்னுரை எழுதியுள்ளார்.

மலேசியத் தமிழர்களின் சமுக வரலாற்றின் ஓர் இருண்ட பகுதியை உயிர்ப்பிக்கும் இந்த நாவல் தமிழ் எழுத்துலகிற்கு கணிசமான கொடை” என்றும் ரெ.கார்த்திகேசு தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, கவிஞர் ஜாசின் ஏ.தேவராஜன், உதயகுமாரி கிருஷ்ணன் என நாட்டின் பல எழுத்தாளர்களும் இந்த நாவல் குறித்து தங்களது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நூலின் விலை 15 ரிங்கிட் ஆகும்.இந்த நூலை வாங்க விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கோ அல்லது செல்பேசி எண்ணுக்கோ தொடர்பு கொள்ளலாம்.

Ko.Punniavan,

3203 Lorong 9,

Taman Ria,

08000 Sungai Petani,

Kedah. 

செல்பேசி எண் – 019-5584905

 

செய்தி – ஃபீனிக்ஸ்தாசன்