Home வணிகம்/தொழில் நுட்பம் முடக்கப்பட்ட இணையதள சேவையை மீட்டெடுத்தது மாஸ்!

முடக்கப்பட்ட இணையதள சேவையை மீட்டெடுத்தது மாஸ்!

453
0
SHARE
Ad

MAS LOGO

கோலாலம்பூர், ஜனவரி 27 – இணைய ஊடுருவல்காரர்கள் சிலரால் முடக்கப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

தற்போது இந்த இணையதளத்தின் வழி வழக்கமான சேவைகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருவதாக மலேசிய ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று திங்கட்கிழமை காலை ‘சைபர் கோலிபேட்’ என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இணைய ஊடுருவல்காரர்கள் குழு மலேசிய ஏர்லைன்ஸ் இணையத் தளத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் பயணிகள் குழப்பமடைந்தனர்.

இந்நிலையில், தங்கள் நிறுவனத்திற்கு இணையதள சேவை வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு முடக்கப்பட்ட இணையதள சேவையை மீட்டெடுத்துள்ளது மலேசிய ஏர்லைன்ஸ்.

இதையடுத்து இணையத் தளம் முடக்கப்பட்டது குறித்து மலேசிய இணைய பாதுகாப்பு பிரிவு (சைபர் செக்யூரிட்டி) மற்றும் போக்குவரத்து அமைச்சில் மாஸ் புகார் அளித்துள்ளது.

இணையத் தளத்தை முடக்கியதன் வழி பயணிகளின் விவரங்கள் உட்பட பல முக்கிய தகவல்களைப் பெற்றிருப்பதாக இணைய ஊடுருவல்காரர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்கள் வழி அறிவித்துள்ள போதிலும், மாஸ் நிர்வாகம் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தங்களது வாடிக்கையாளர் மற்றும் பயணிகளின் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாகவும், இந்தப் பிரச்சினை தற்காலிகமான ஒன்றுதான் என்றும் மாஸ் அறிவித்துள்ளது. மேலும் பயண முன்பதிவு உள்ளிட்ட சேவைகளில் எந்தவித சிக்கலும் தற்போது இல்லை என அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.