Home நாடு “முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் – சங்கப் பதிவகத்தை குறை கூறாதீர்கள்” – பழனிவேலுவைச் சாடினார் பார்த்திபன்.

“முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் – சங்கப் பதிவகத்தை குறை கூறாதீர்கள்” – பழனிவேலுவைச் சாடினார் பார்த்திபன்.

485
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 1 – “மஇகா தேர்தலில் முறைகேடு நிகழ்ந்ததற்கு தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ  பழனிவேலே முழுமுதற்காரணம். ஏனென்றால் தேர்தல் குழுவின் தலைவரே பழனிவேல்தான். எனவே, நடந்த குளறுபடிகளுக்கு இவரே முழுபொறுப்பேற்க வேண்டும் . அதைவிடுத்து தேசிய முன்ணனியையும் ஆர் ஓ எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவிலாகாவின் தலைமைத்துவத்தையும் குறை கூறி வருவது வருத்தம் அளிக்கும் செயலாகும். பழனிவேலின் செயல் குற்றவாளியே நிரபராதிபோல பேசுவதற்கு ஒப்பாகும்” என்று சிலாங்கூர் மாநில மஇகாவின் முன்னாள் செயலாளர் கரு. பார்த்திபன் சுட்டிக்காட்டினார்.

Parthiban Press Conf 2

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கரு.பார்த்திபன் (இடமிருந்து: செர்டாங் தொகுதி தலைவர் என்.இரவிச்சந்திரன், கரு.பார்த்திபன், அம்பாங் தொகுதி தலைவர் வில்சன், கிளானா ஜெயா தொகுதித் தலைவர் டத்தோ எஸ்.எம்.முத்து)

#TamilSchoolmychoice

பத்திரிக்கைகளுக்கு வெளியிட்ட அறிக்கையொன்றில் மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான பார்த்திபன் இவ்வாறு கூறியுள்ளார்.

“ம இ காவில் நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. காரணம் பழனிவேலின் நிலையற்ற முடிவும் செயலுமே ஆகும். ஏனென்றால் ம இ கா கிளைத் தலைவர்களிடம் ஒரு பேச்சு, பிரதமரிடம் ஒப்புதல் அளித்துவிட்டு பின்னர் பல்டி அடிப்பது என எல்லாமே பழனிவேலுக்கு ஒரு விளையாட்டாக இருந்து வருகின்றது. இந்நிலை நாளடைவில் கிளைத் தலைவர்கள் மற்றும் இந்திய சமுதாயத்தினரிடையே அதிருப்தியையும் குழப்பத்தையும் சலிப்பையும ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சுமூகமான தீர்வை ஏற்படுத்த பிரதமர், துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர் கொடுத்த ஆலோசனையின்படி துணைத் தலைவருடன் இணைந்து 2009 இல் தேர்வு பெற்ற மத்திய செயலவை கூட்டம் உடனடியாக கூட்டப்பட்ட வேண்டும் என உறுதியளித்தற்கு இணங்க உடனடியாக அந்தக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்” என்றும் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்தார்.

“சங்கப் பதிவகத்தின் உத்தரவின் படி 2009 ஆம் ஆண்டின் மத்திய செயலவை அமைக்கும் தேர்தல் குழுவின் கீழ் கட்சியின் புதிய தேர்தல் நடைபெற வேண்டும்.  சங்கப் பதிவகத்தின் ஆலோசனைப்படி ம இ காவின் சட்ட விதிகளுக்கேற்ப ஏப்ரல் மாதம் கிளை தேர்தல்கள், மே மாதத்தில் தேசிய தலைவர் தேர்தலும் ஜூன் மாதத்தில் தொகுதிகளுக்கான தேர்தலும், ஜூலை மாதத்தில் துணைத்தலைவர், உதவித்தலைவர், 23 மத்திய செயலவை உறுப்பினர்கள் ஆகியோருக்கான தேர்தல்களும் நடத்த தேசியத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் பார்த்திபன் வலியுறுத்தினார்.

Parthiban Press Conf

சிலாங்கூர் மாநிலத்தின் மஇகா தொகுதித் தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் கரு.பார்த்திபன்

நேற்று, சிலாங்கூர் மாநிலத்தின் தொகுதித் தலைவர்களுடனான சந்திப்புக் கூட்டத்தை நடத்திய பின்னர் வெளியிட்ட அறிக்கையில் பார்த்திபன் “சிலாங்கூர் மாநிலத்தின் 22 தொகுதித் தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி தாங்கள் எத்தனை முறை நீதிமன்றம் சென்றாலும் சங்கங்களின் பதிவிலாகாவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்பது ஒருமித்த கருத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்றும் பார்த்திபன் தெரிவித்தார்.

“1946இல் அமைக்கப்பட்ட இக்கட்சி அழிவதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அதோடு நான்கு லட்சம் உறுப்பினர்களின் லட்சியங்களைத் தங்கள் தலைமையில் அழித்து விடாதீர்கள் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தேசியத் தலைவரை ஒருமனதாகக் கேட்டுக்கொண்டனர்” என்றும் பார்த்திபன் மேலும் கூறினார்.