Home நாடு பிரதமர் மகள் திருமண விருந்தை நோக்கி பேரணி – காவல் துறை தடுத்தனர்!

பிரதமர் மகள் திருமண விருந்தை நோக்கி பேரணி – காவல் துறை தடுத்தனர்!

450
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 28 – அன்வார் இப்ராகிமின் விடுதலையைக் கோரி, இன்று நடைபெற்ற ‘கித்தா லாவான்’ (நாங்கள் போராடுவோம்) என்ற பெயரில் நடத்தப்பட்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதோடு, இன்று நடைபெற்ற பிரதமர் மகள் திருமண விருந்து மண்டபத்தை நோக்கியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேறிச் செல்ல முற்பட்டனர்.

இருப்பினும் ஆர்ப்பாட்டக்காரர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

Kita Lawan Logoஇதற்கிடையில் பல முக்கியத் தலைவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

கித்தா லாவான் பேரணியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஃபாரிஸ் மூசா பேரணி நடைபெற்று முடிந்த அரை மணி நேரத்தில் தேசிய நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இன்றிரவு 7.45 மணியளவில் ஃபாரிஸ் கைது செய்யப்பட்டதாக பிகேஆர் கட்சியின் தொடர்புக் குழு இயக்குநர் ஃபாமி பாட்சில் தெரிவித்துள்ளார். ஃபாரிஸ் தற்போது டாங் வாங்கி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

இன்று நடைபெற்ற பிரதமரின் மகள் நஜ்வாவின் திருமண விருந்தை நோக்கி பேரணியினர் முன்னேறிச் சென்றனர். இருப்பினும் திருமண விருந்து நடைபெற்ற கேஎல்சிசி கண்காட்சி மண்டபத்தை சுற்றி காவல் துறையினர் பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தியதோடு, ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.

தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்த காவல் முனையங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்குப் பின்னர் அவர்கள் கலைந்து செல்ல வேண்டுமென அறிவுறுத்தினர்.

டாங் வாங்கி காவல் நிலையத்திற்கு எதிரில் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி நின்று தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிகேஆர் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனக் கூக்குரலிட்டனர்.

ஏற்கனவே, பிகேஆர் தலைவர்கள் ரபிசி ரம்லியும், தியான் சுவாவும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நஜிப் ராஜினாமா செய்ய வேண்டுமென கூக்குரலிட்டதோடு, நஜிப் ராஜினாமா செய்ய வேண்டுமென்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.