Home இந்தியா ஜெயலலிதா வழக்கில் இருந்து பவானி சிங் நீக்கம் – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஜெயலலிதா வழக்கில் இருந்து பவானி சிங் நீக்கம் – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

402
0
SHARE
Ad

Bhawani-Singhபுதுடெல்லி, ஏப்ரல் 27 – முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கி உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கிலும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானார். அவரது நியமனத்தை எதிர்த்து தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியதால், மனு மீதான விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அதன்படி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் முன்னிலையான அமர்வில் இந்த விசாரணை நடைபெற்றது.

அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அந்தியார்ஜூனா தன்னுடைய இறுதி வாதத்தில், மேல்முறையீட்டு மனுவின் மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பவானிசிங் வாதாடுவதற்கு எந்தவகையான சட்டரீதியான உறவும் கிடையாது என்றும், அவர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக செயல்பட்டார் என்றும் கூறினார்.

ஜெயலலிதா தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், அரசு வழக்கறிஞர் நியமனம் என்பது குறிப்பிட்ட வழக்கு தொடர்பானது என்றும், பவானிசிங் நியமனத்தில் விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள்,  பவானி சிங் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், பவானி சிங் நியமனம் செல்லாது என்று அறிவித்தாலும், வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தை முன் வைத்தனர்.

மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் எழுத்து மூலம் அளிக்கும் வாதத்தை பெற்றுக்கொண்டு தீர்ப்பளிக்கவும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு அனுமதி அளித்திருந்தனர்.

மேலும், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும், வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையிலும் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்க எவ்விதமான தடையும் இல்லை என்று தெரிவித்தனர்.

இத்தைகைய பரபரப்பான சூழ்நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் ஆகியோர் கொண்ட அமர்வு, அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமனம் செல்லாது என்று அதிரடியாக கூறினர். அதே நேரத்தில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு விசாரணை கிடையாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பை தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கலாம் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.