Home உலகம் குடும்பத்தினருடன் கடைசி நிமிடங்களில் மயூரன், ஆண்ட்ரியூ சான்!

குடும்பத்தினருடன் கடைசி நிமிடங்களில் மயூரன், ஆண்ட்ரியூ சான்!

529
0
SHARE
Ad

ஜகார்த்தா, ஏப்ரல் 28 – பாலி நயன் வழக்கில் மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் இரு ஆஸ்திரேலிய பிரஜைகள் மயூரன் சுகுமாரன், ஆண்ட்ரியூ சான் உட்பட 9 பேருக்கும் இன்னும் சில மணி நேரங்களில் மரண தண்டனையை வழங்கவுள்ளது இந்தோனேசிய அரசாங்கம்.

baile-nine

அவர்களை கடைசியாக பார்த்து பேச குடும்பத்தினர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

தற்போது நூசா கம்பாங்கன் தீவில் உள்ள சிறையில், மயூரன் சுகுமாறனுடன் அவரது தந்தை சாம், தாயார் ராஜி, சகோதரர் சிந்து மற்றும் சகோதரி பிருந்தா ஆகியோரும், ஆண்ட்ரியூ சானுடன் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் உள்ளனர்.

இன்று மதியம் மலேசிய நேரப்படி 3 மணி வரை பேச குடும்பத்தினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

9 பேருக்கு இன்று மரண தண்டனை என்பதால், அங்கு கதறல்களும், கூக்குரல்களும் கேட்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாதிரியார்கள் உடன் இருக்க மறுப்பு

இந்தோனேசியா தங்களது வழக்கப்படி, தண்டனை பெற இருப்பவர்களுடன் ஒரு மத ஆலோசகர்களை அமர்த்தியுள்ளது. ஆனால், மயூரனும், ஆண்ட்ரியூ சானும் தங்களது சொந்த பாதிரியார்களை உடன் வைத்து கொள்ள கேட்ட அனுமதியை, சிறை நிர்வாகம் மறுத்துவிட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

துப்பாக்கியால் சுடும் தண்டனை

இன்று நள்ளிரவில் கைதிகள் அறைகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு தண்டனை வழங்கப்படும் இடத்திற்கு அழைத்து வரப்படுவார்கள்.

அவர்கள் அங்கு உட்கார்ந்து கொள்ளவோ, முட்டி போட்டுக் கொள்ளவோ அல்லது நின்று கொள்ளவோ அனுமதி அளிக்கப்படும். அதே நேரத்தில் அவர்கள் கண்கள் கருப்பு நிற துணியால் கட்டப்பட்டிருக்கும். அந்த கருப்புத் துணியை விலக்கிக் கொள்ளவும் அவர்கள் அனுமதிக்கப்படுவர்.

கருப்பு நிற அடையாளம் ஒன்று கைதிகளின் இதயப் பகுதியில் குறிக்கப்பட்டிருக்கும். 12 சிறை அதிகாரிகள் துப்பாக்கியால் அந்த குறியை நோக்கி சுட்டு தண்டனையை நிறைவேற்றுவார்கள்.

இந்தோனேசியாவில், 12 பேர் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு தண்டனை நிறைவேற்ற காரணமாக கூறப்படுவது என்னவென்றால், 12 பேர் சுடும் பொழுது எந்த துப்பாக்கியில் இருந்த குண்டு கைதிகள் நெஞ்சைத் துளைத்தது என்பது தெரியாது என்பதால் தண்டனை நிறைவேற்றுபவருக்கு வாழ்நாளில் குற்ற உணர்வு இருக்காது என்று நம்பப்படுகின்றது.

பிரார்த்தனைகள் 

ஆஸ்திரேலியாவில் நேற்று மயூரன் மற்றும் ஆண்ட்ரியூ சானின் குடும்பத்தினர்கள், நண்பர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் சுமார் 15,000 பூக்களை வைத்து பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.

ஆண்ட்ரியூ சான் தனது காதலியை மணந்து கொண்ட தகவலை நேற்று அவரது சகோதரர் மைக்கேல் சான் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இன்னும் சில மணி நேரங்களில் தண்டனை நிறைவேற்றவுள்ளதால் நூசா கம்பாங்கன் சிறையில் 9 சவப்பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.