Home நாடு சுப்ரா கட்சியிலிருந்து இடைநீக்கம் எனச் சங்கப் பதிவிலாகா கடிதம் வெளியிடுமா?

சுப்ரா கட்சியிலிருந்து இடைநீக்கம் எனச் சங்கப் பதிவிலாகா கடிதம் வெளியிடுமா?

580
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 27 – மஇகாவின் இடைக்காலத் தேசியத் தலைவர் என டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் சங்கப் பதிவிலாகாவால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று டத்தோ எஸ்.சோதிநாதன் தலைமையில் ஒரு குழுவினர் நேற்று சங்கப் பதிவிலாகா அலுவலகம் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Dato S.Sothinathanஇன்று தமிழ் நாளேடுகளில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில், சோதிநாதன் விடுத்துள்ள அறிக்கையில், 12 மாதங்களுக்கு டாக்டர் சுப்ரா மஇகாவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்  என்றும், அதனைச் சங்கப் பதிவிலாகா உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பழனிவேல் தலைமையில் கூடிய 2009க்கான மத்தியச் செயலவை டாக்டர் சுப்ரா உள்ளிட்ட 15 பேரை இடைநீக்கம் செய்த முடிவை உறுதிப்படுத்தியதாகவும் அறிவித்துள்ளார் சோதிநாதன்.

#TamilSchoolmychoice

சுப்ராதான் இடைக்காலத் தலைவர் என்ற சங்கப் பதிவிலாகாவின் அறிவிப்புக்கு மாறாக, அவர் இடைக்காலத் தலைவர் எனக் கூறிக் கொள்வதற்குத் தடை விதிக்கும் உத்தரவு ஒன்றைத் தான் பெற்றுள்ளதாகவும் சோதிநாதன் அறிவித்துள்ளது, மஇகா வட்டாரத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் இதனை உறுதிப் படுத்தும் கடிதம் எதனையும் சோதிநாதன் இதுவரை வெளியிடவில்லை.

இதற்கிடையில், எதிர்வரும் திங்கட்கிழமை சங்கப் பதிவிலாகாவிடமிருந்து சோதிநாதனுக்குப் புதிய கடிதம் ஒன்று வழங்கப்படும் என்ற ஆரூடங்கள் பழனிவேலு தரப்பில் பரவி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து சோதிநாதன் தெரிவித்துள்ளது போல் சங்கப் பதிவதிகாரி கூறியுள்ளாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் சங்கப் பதிவிலாகா சார்பில் வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே, சுப்ராதான் தலைவர் என அறிவித்து அதிகாரப்பூர்வக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ள சங்கப் பதிவிலாகா அதற்கு முரண்படும் வகையில் மற்றொரு கடிதத்தைச் சோதிநாதன் கூறுவதுபோல் வெளியிடுவார்களா என்ற  பரபரப்பும் தற்போது ஏற்பட்டுள்ளது.

சோதிநாதன் வெளியிட்டுள்ள தகவல் உண்மையானதுதானா என்ற குழப்பத்தை நிவர்த்திக்கும் வகையில் சங்கப் பதிவிலாகாவால் முறையான அறிவிப்பு திங்கட்கிழமை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.