Home உலகம் ஓரினச்சேர்க்கைக்கு எதிராகப் போபி ஜிண்டால் அறிக்கை! 

ஓரினச்சேர்க்கைக்கு எதிராகப் போபி ஜிண்டால் அறிக்கை! 

580
0
SHARE
Ad

??????????????????????????வாஷிங்டன், ஜூன் 29 – ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கித் தீர்ப்பளித்துள்ள நிலையில், லூசியானா மாகாண ஆளுநரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களுள் ஒருவருமான போபி ஜிண்டால் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே நடைபெறுவது தான் திருமணம். எனது பார்வையில், அத்திருமணம் என்னுடைய கிறிஸ்தவ நம்பிக்கையின் படி கடவுளால் எழுதப்பட்டது. அதனை முந்தைய நீதிமன்ற முடிவுகள் மாற்றவில்லை. ஆனால் தற்போது உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாகக் கட்டுபாடுகள் இன்றிச் செயல்படுகிறது. தனது விருப்பத்திற்கு ஏற்ப விதிகளை உருவாக்குகிறது. பொறுப்பான நீதிமன்ற அமைப்பாக அது செயல்படாமல், ஒரு கருத்துக் கணிப்பு மையம் போன்று செயல்படுகிறது.”

“தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பால், கிறிஸ்தவர்களின் மத உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அது அவர்களின் சுதந்திரத்துக்கு எதிராக உள்ளது. இந்த விவகாரத்தில் மதச்சுதந்திரத்தைக் காப்பாற்றப் போராடுவேன். எனது போராட்டத்துக்குக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

பிறப்பால் இந்து மதத்தைச் சேர்ந்த ஜிண்டால், பருவ வயதில் கிறித்துவ மதத்திற்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிபர் வேட்பாளருக்கு நிற்கத் தகுதி உள்ள ஒருவர் உச்ச நீதிமன்றத்தை, மதத்தின் காரணமாக விமர்சிப்பது அமெரிக்காவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.