Home Featured கலையுலகம் சூப் எஃப்எம் அதிகாரப்பூர்வ திறப்பு விழா கண்டது! முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பு!

சூப் எஃப்எம் அதிகாரப்பூர்வ திறப்பு விழா கண்டது! முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பு!

829
0
SHARE
Ad

unnamedகோலாலம்பூர், ஆகஸ்ட் 17 –  15 வருடங்களுக்கு முன் ஒரு தனி மனிதன் கண்ட கனவு, அதை நோக்கிப் பயணிக்கையில் அவர் எதிர்கொண்ட போராட்டங்கள், நிராகரிப்புகள், அவற்றையெல்லாம் கடந்து பெற்ற சின்ன சின்ன முன்னேற்றங்கள் ஆகியவற்றோடு பலரின் நட்பு எனும் பாலத்தால் அந்தக் கனவு இன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

ஆம்.. சூப் எஃப் எம் எனும் இணைய தள வானொலியே அந்த விருட்சம். வானொலி அறிவிப்பாளராக வேண்டும் என்ற லட்சியத்தில் பயணித்தவர், இன்று தானே ஒரு இணைய தள வானொலியைத் தொடங்கியதன் மூலம் தன்னைப் போல் பலருக்கும் வாய்ப்பளிக்கும் ஒரு நிலைக்கு உயர்ந்திருக்கிறார் ஜேசன் ரவிச்சந்திரன்.

கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி, சவுண்ட் ஆஃப் யுனிக் பெர்சன் (SOUND OF UNIQUE PERSON) என்ற பெயரில் பண்டார் ரிஞ்சிங்கில் தொடங்கப்பட்ட இந்த இணைய தள வானொலி, ஆரம்பத்தில் 2 மணி நேரங்களுக்கு மட்டுமே இயங்கியது.

#TamilSchoolmychoice

பின்னர், சூப் எஃப் என்று பெயர் மாற்றம் கண்டு ஜெய் என்ற ஜெய் எஃப் எம் தோற்றுநரோடு இணைந்து இன்று வரை சிறப்பாக இயங்கி வருகின்றது. சூப் எஃப் எம்-மிற்கு ஜெய் ஆலோசகராக செயல்பட்டு ஜேசன் இரவிசந்திரனுக்கு தொடர்ந்து வழி காட்டி வருகின்றார்.

இவ்வாறு சூப் எஃப் எம் சின்ன சின்ன முன்னேற்றங்களோடு நகர்ந்து, இன்று 10 அறிவிப்பாளர்கள், ஒரு ஆலோசகர், ஒரு மேனேஜர் மற்றும் 4 நிர்வாகிகள் ஆகிய குழுவினரோடு, வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

காஜாங்-கில் அமைந்திருக்கும் சூப் எஃப் எம், மாலை 6 முதல் நள்ளிரவு 12 வரை நிகழ்ச்சிகளை இணையம் வழியாக ஒலிபரப்பி வருகின்றது.

சூப் எஃப் எம் வழங்கும் அரிய தகவல்கள், துணுக்குகள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை உலகெங்கும் உள்ள ரசிகர்கள் கேட்டு ரசித்து வருவதோடு, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்தாகிராம்,வீ சாட், மின்னஞ்சல் என பலதரப்பட்ட நட்பு ஊடகங்களில் வழியாக நிகழ்ச்சி குறித்த தங்களின் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

சூப் எஃப் எம்-ன் முதல் முயற்சியாக கடந்த 2013-ம் ஆண்டு தீபாவளிக்கான கவிதைக் காணொளி அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த வருடம் கடந்த மே மாதம் மீண்டும் அதிரடியாக சூப் எஃப் எம் தங்களது புதிய அறிவிப்பாளர்களைக் கொண்டு ஒரு கூட்டு முயற்சியில் தங்களது இணைய தள வானொலிக்கு சுயமாக பாடல் வரிகளை எழுதி, பாடி யூடியூப் வழியாக வெளியிட்டனர்.

இந்த இணைய வானொலியை தற்சமயம் மலேசியாவில் 60 விழுக்காட்டினரும், சிங்கப்பூரில் 40 விழுக்காட்டினரும் கேட்டு ரசித்து வருவதோடு, உலகில் பலதரப்பட்ட நாடுகளிலும் செவிமடுத்து வருகின்றனர்.

10422947_1028068367220650_3005106108470654706_n

(ஜேசன் ரவிச்சந்திரன்)

மலேசியா, சிங்கப்பூருக்கு அடுத்து, ஸ்ரீலங்கா, இந்தியாவிலும் சூப்எப்எம் நிகழ்ச்சிகளைப் பலர் தினமும் கேட்டு ரசித்து வருகின்றனர். குறிப்பாக சென்னை,கோயம்பத்தூர், திருச்சி,பெங்களூர் போன்ற நகரங்களில் அதிகமான நேயர்கள் உள்ளனர்.

மேலும், ரஸ்யா, யூ.கே, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் சூப்எப்எம்-மிற்கு ரசிகர்கள் உள்ளனர்.

இதனிடையே, மலேசியக் கலைஞர்கள் மட்டுமின்றி ஸ்ரீலங்கா, சுவிஸ்ட்லார்ந்து, பிரான்ஸ்,சென்னை போன்ற நகரங்களில் உள்ள பிரபலப் பாடகர்கள், பாடலாசிரியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டவர்களை சூப் எஃப் எம் பேட்டி கண்டு வருகின்றது.

அவ்வகையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெற்றிகரமாக சூப் எஃப் எம் இணையதள வானொலி அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.

இந்த விழா சுபாங்கில் உள்ள டோர்செட்  5 நட்சத்திர தங்கும் விடுதியில் ஹை-டீ எனும் விருந்தோடு மாலை 3 முதல் 7 வரை நடைபெற்றது.

15 வருட கனவை நினைவுறுத்தும் வகையில் தான், இந்த ஆகஸ்ட் 15 தேதியை தான் தேர்ந்தெடுத்ததாக தோற்றுநர் ஜேசன் இரவிசந்திரன் அந்நிகழ்வில் தெரிவித்தார்.

மலேசியாவிலேயே முதன் முறையாக ஓர் இணைய வானொலி அதிகாரப்பூர்வ திறப்பு விழா காணும் ஒரு சரித்திரப் பதிவு இது என்றும் கூறலாம்.

unnamed (1)

திறப்பு விழாவில் முதல் அங்கமான வருகையாளர் பதிவு அங்கமே மாறுபட்ட வழியில் இடம் பெற்றது. வந்திருந்த வி.ஐ.பி-க்கள்,கலைஞர்கள், செய்தியாளர்கள் முகநூல் வழி வாழ்த்து இடுக்கைகளைப் பகிர்ந்து கொண்டதே இவர்கள் “ட்ரண்ட் செட்டெர்ஸ்” ( trend setters ) என்பதை நிரூபித்தனர். அடுத்து, தொடக்க அங்கமே வித்தியாசமாய் அமைந்திருந்தது.

மறைந்த போப் பாடகர் மைக்கல் ஜேக்சனின் பாடலுக்கு 2 மங்கைகள் பரத அபிநயங்கள் பிடித்து ஆடினர். பின்னர், அஸ்ட்ரோ புகழ் சாய் சுதா ‘இதயத்தில் ஏதோ ஒன்று’ பாடலைப் பாடி இசை மழையில் நனைத்தார்.

தொடர்ந்து, சூப் எஃப் எம் பாடலுக்கு பிருந்தா நடனக் குழுவினர் ஸ்டலிஷ் -ஆக ஆடினர். அடுத்து, சூப் எஃப் எம் அறிவிப்பாளர் வினேஷ் அவர்கள் ‘இன்னும் என்ன தோழா’ பாடலை அழகாகப் பாடி கவர்ந்தார்.

அடுத்து, அறிவிப்பாளர்கள் மெட்லி நடனங்களை வழங்கி நிகழ்ச்சிகளை இன்னும் சுவாரஸ்யமாக்கினர். இவர்களோடு நிகழ்ச்சியை  சூப் எஃப் எம் அறிவிப்பாளர்கள் வசந்த்   (Mr.Pumpkin) மற்றும் விஜய தாமரை (Bing Bing VG) நேர்த்தியாகவும் கலகலப்பாகவும் வழிநடத்தினர்.

சிறப்புப் பிரமுகராக டான்‚ டாக்டர் ஜேம்ஸ் ஆல்ஃப்ரெட் கலந்து கொண்டு இத்திறப்பு விழாவை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர்.

இண்டெர்கிரேல் வெண்ட்சேர் ( intergral ventures ) தலைமை அதிகாரி குமார் அவர்கள் மற்றும் நாராயணன் சந்திரமோகன் இருவரும் இந்த இணைய தள வானொலிக்கு முதலீட்டாளர்களாக ஒப்பந்தமிட்டு தங்களது ஒப்பந்தப் பத்திரத்தை சூப் எஃப் எம் நிறுவநருடன் மேடையில் மாற்றிக் கொண்டனர்.

இந்த பிரமுகர்களைத் தவிர கலையுலக எஸ்.பி.சரவணன், எஸ்.ஜி புரோடக்‌ஷன் ஜி நாயுடு, மைந்தன் புகழ் சி.கே குமரேசன், முத்துக்குமார் வாண்டட் இயக்குநர் மற்றும் நடிகர் எம்.பத்மநாபன், எஸ்.சரண், கேஷ் வில்லன், மாறன் ரோபோ மற்றும் சரிஷ் டி7, சஷினா உரிமையாளர் ஸ்ரீதர் நாயுடு, சாக்ஸ் மீடியா உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 – ஸ்ரீஷா கங்காதரன்