Home Featured நாடு செப்டம்பர் 9 : மொகிதின், ஷாபி அப்டால் அரசியல் தலைவிதியை முடிவு செய்யப்போகும் அம்னோ உச்சமன்றம்!

செப்டம்பர் 9 : மொகிதின், ஷாபி அப்டால் அரசியல் தலைவிதியை முடிவு செய்யப்போகும் அம்னோ உச்சமன்றம்!

801
0
SHARE
Ad

Shafie - Apdal - Muhyiddin - Yassinபத்து பகாட்- வெளிநாட்டில் இருந்த அம்னோவின் துணைத் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நாடு திரும்பியுள்ளதைத் தொடர்ந்து, எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் அம்னோ உச்சமன்றத்தில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், அவரையும், மற்றும் அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டாலையும் கட்சியில் இருந்து அம்னோ உச்சமன்றம் நீக்கப் போவதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று மற்றொரு உதவித் தலைவரான டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார்.

இதைவிட பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியிலான பல்வேறு முக்கிய விவகாரங்களை நாடு எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ள அம்னோ உச்சமன்ற கூட்டத்தில் மொகிதின், ஷாபி அப்டால் இருவரும் நீக்கப்படுவார்கள் என தகவல் ஊடகங்களில் பரபரப்பு தகவல் உலா வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டபோதே ஹிஷாமுடின் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

“அம்னோ உச்சமன்றக் கூட்டமானது மூடப்பட்ட அரங்குக்குள் நடைபெறும். அதில் விவாதிக்கப்படும் விஷயங்களை பகிரங்கமாக வெளியில் பேசக்கூடாது,” என்றார் ஹிஷாமுடின்.

இதற்கிடையே மொகிதினும், ஷாபியும் நீக்கப்பட்டால் அது அம்னோவை வலுவிழக்கச் செய்யும் என்பதுடன், கட்சியில் நிலவும் ஒற்றுமையையும் குலைக்கும் என டான்ஸ்ரீ முகமட் அசிஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேற்கண்ட வதந்தியை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் முகமட் அசிஸ் விருப்பத்தைப் பொறுத்தது என்று குறிப்பிட்ட ஹிஷாமுடின், அம்னோ உறுப்பினர்கள் இத்தகைய வதந்திகளை நம்பமாட்டார்கள் என தாம் கருதுவதாகக் கூறினார்.

இதற்கிடையில், மொகிதின், ஷாபி ஆகியோரோடு, கெடா மந்திரி பெசாரும், துன் மகாதீரின் மகனுமான முக்ரிஸ் மகாதீரும் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

பெர்சே பேரணியில் கலந்து கொண்ட மகாதீருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நஜிப், முக்ரிசை கட்சியிலிருந்தே நீக்கலாம் என்ற அரசியல் ஆரூடமும் கூறப்படுகின்றது.