Home Featured தொழில் நுட்பம் ‘கூகுள் மேப்’ செயலியால் மலேசியாவிற்கு ஆபத்தா?

‘கூகுள் மேப்’ செயலியால் மலேசியாவிற்கு ஆபத்தா?

629
0
SHARE
Ad

googlemapsofflineகோலாலம்பூர் – மலேசியாவில் கார் உள்ளிட்ட வாகனங்களின் இயக்கம் பெரும்பாலும் கூகுள் மேப் மற்றும் வேஸ் (Waze) செயலிகளை நம்பி தான் இருக்கிறது. மூலை முடுக்குகளையும் தெள்ளத் தெளிவாக காண்பிக்கும் இந்த செயலிகளால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில், தெனாம் நாடாளுமன்ற உறுப்பினர் ராய்னி உங்கி கூறுகையில், “இஸ்ரேலின் ‘வேஸ்’ (Waze) செயலியையும், அமெரிக்காவின் கூகுள் மேப்பையும் மலேசியர்கள் பயன்படுத்துவதன் மூலம், உள்நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் அந்நிய சக்திகளின் கைகளில் கிடைக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பான விவகாரங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக இணை அமைச்சர், “எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்தையும் அச்சுறுத்தலாக நாம் பார்க்கக் கூடாது. மக்களுக்கு எதை தேர்வு செய்ய வேண்டும் என்பது தெரியும். குறிப்பிட்ட அந்த செயலிகளை பயன்படுத்தலாமா? வேண்டாமா? என்பதை அவர்களே முடிவு செய்வார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்த செயலிகளுக்கு கோல கிராய் நாடாளுமன்ற உறுப்பினர் ஹட்டா ரம்லியும் எதிரான கருத்துக்களையே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “நமது தனிப்பட்ட தகவல்களை கூகுள் மேப் உள்ளிட்ட செயலிகள் எடுத்துக் கொள்கின்றன. இதன் மூலம் நமது பயணங்கள் இந்த செயலியின் மூலம் கண்காணிக்கப்படுகின்றது” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்த செயலிகள் தொடர்பாக பொதுமக்கள் கலவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.