Home Featured நாடு ஆசியா பசிபிக் இளைஞர்களிடையே எச்ஐவி அதிகரிப்பு – யுனிசெப் எச்சரிக்கை!

ஆசியா பசிபிக் இளைஞர்களிடையே எச்ஐவி அதிகரிப்பு – யுனிசெப் எச்சரிக்கை!

493
0
SHARE
Ad

HIVகோலாலம்பூர் – ஆசியா பசிபிக் வட்டாரத்தில் 10 முதல் 19 வயதிற்கிடையிலான பருவ வயதினரில் சுமார் 220,000 பேர் எச்ஐவி தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக யுனிசெப் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் 50,000 பருவவயதினர் (15-19 வயதிற்குட்பட்டவர்கள்) புதிதாக எச்ஐவி தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகவும், அதன்படி ஆசியா பசிபிக் வட்டாரத்தில் மட்டும் அந்த ஆண்டு புதிய எச்ஐவி தொற்று 15 சதவிகிதமாக உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதில் குறிப்பிடும்படியான நகரங்களாக பாங்காக், ஹனாய் மற்றும் இந்தோனேசியாவின் ஜகார்த்தா ஆகிய நகரங்களில் புதிய எச்ஐவி தொற்று அதிகரித்துள்ளது.

#TamilSchoolmychoice

விளிம்புநிலை மக்கள் வசிக்கும் நகரங்களில் ஆண் ஆணுடன் உடலுறவு வைத்துக் கொள்வது, திருநங்கைகள், பாலியல் தொழிலாளர்கள், பாலியலுக்காக கடத்தப்பட்டவர்கள் மற்றும் ஊசி மூலமாக போதை மருந்து ஏற்றிக் கொள்கிறவர்கள் ஆகியோருக்கு எச்ஐவி நோய் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறுகின்றது.

தற்போது, ஆசியா பசிபிக் வட்டாரத்தில் மூன்றில் ஒரு பங்கு பருவ வயதினர் மட்டுமே எச்ஐவி நோய் தொற்றுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

ஆசியா பசிபிக் வட்டாரத்தில் 2005 முதல் 2014-ம் ஆண்டு வரையில், எய்ட்ஸ் தொடர்பான மரணங்கள் 110 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாகவும், அவற்றில் 28 சதவிகிதம் பேர் இளம் வயதினர் என்றும் ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் நாள் மக்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த  ‘‘உலக எய்ட்ஸ் தினம்” அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தின மையக் கருத்து, ‘‘புதிய எச்ஐவி நோய் தோற்று இல்லாத, புறக்கணிப்பு இல்லாத மற்றும் எய்ட்ஸ் நோயின் மூலம் உயிர் பலியில்லாத நிலையை உருவாக்குதல்” என்பதாகும்.