Home Featured நாடு மலேசியா ஏர்லைன்சின் புதிய தலைவராகப் போவது மலேசியரா? வெளிநாட்டினரா? – விவாதம் துவங்கியது!

மலேசியா ஏர்லைன்சின் புதிய தலைவராகப் போவது மலேசியரா? வெளிநாட்டினரா? – விவாதம் துவங்கியது!

710
0
SHARE
Ad

AP I MYS MALAYSIA AIRLINESகோலாலம்பூர் – மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நடப்புத் தலைவரான ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோபர் முல்லர், தனது மூன்றாண்டுகள் பதவிக் காலம் முடியும் முன்பே வரும் செப்டம்பரில் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அவரது இந்த திடீர் அறிவிப்பு மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கும், அதன் தலைமை நிறுவனமான கசானா நேஷனல் நிறுவனத்திற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே ஆண்டில் நடந்த இரண்டு விமானப் பேரிடர்களால், சரிவைச் சந்தித்த மலேசியா ஏர்லைன்ஸ், கிறிஸ்டோபர் முல்லர் பதவி ஏற்ற பின்னர் சற்றே எழத் தொடங்கியது.

#TamilSchoolmychoice

அவரது நிர்வாகத்தை நம்பிய கசானா நேஷனல் நிறுவனமும் மலேசியா ஏர்லைன்சை லாபகரமான ஒரு நிறுவனமாக மாற்றும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வந்தது.

mullerஇந்நிலையில், கிறிஸ்டோபர் முல்லரின் திடீர் பதவி விலகல் அறிவிப்பால், கசானா நேஷனல் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் பாதிப்படையலாம் என விமானப் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, அவருக்குப் பதிலாக அப்பதவியில் அமரப் போகும் அடுத்தத் தலைவர் மலேசியாவைச் சேர்ந்தவரா? அல்லது மீண்டும் வெளிநாட்டினர் யாராவது அமர்த்தப்படுவார்களா? என்ற சர்ச்சை இப்போதே எழத் தொடங்கிவிட்டது.

மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குத் தலைமை வகிக்க அமர்த்தப்பட்ட முதல் வெளிநாட்டவர் முல்லர் ஆவார். அவர் நியமனம் செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்தபோதே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

ஆகவே, மீண்டும் ஒரு வெளிநாட்டினரை அவருக்குப் பதிலாக அமர்த்தி, அரசாங்கம் மேலும் தனக்கு சிக்கலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

உள்ளூர் தலைவர்கள் இரண்டு பேர்:

இதனிடையே, கிறிஸ்டோபர் முல்லருக்குப் பதிலாக அப்பதவியில் அமர மலேசியர்கள் இரண்டு பேர் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக மலேசியாகினி தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் படி, ரயானிஏர் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயலதிகாரி ஐரிஸ்மேன் பீட்டர் பெல்லும்,  செல்காம் அக்சியடா பெர்ஹாட் நிறுவனத்த்தின் (Celcom Axiata Bhd) தலைவர் மொகமட் சசாலி ரம்லியும் அப்பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டு வருவதாகப் பேச்சுகள் எழுந்துள்ளன.

மொகமட் சசாலி ரம்லி இதற்கு முன்பு விமான நிறுவனத்தை நிர்வகிப்பதில் அனுபவம் இல்லாதவர். என்றாலும், கடந்த ஆண்டு தான் வாரியத்தில் இணைந்துள்ளார்.

விமானப் போக்குவரத்துத் துறையில் அனுபவமில்லாத ஒருவரைத் தலைவராக நியமிப்பது ஒன்று உலகில் முதல் முறை இல்லை.

இதற்கு முன்பு ஜப்பான் நாட்டில், ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நிர்வகிக்க அத்துறையில் அனுபவமே இல்லாத கசாவ் இன்னாமோரி நியமிக்கப்பட்டு, அவர் அந்நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்திக்காட்டியதற்குச் சான்றுகள் உள்ளன.

எனவே, அனுபவமில்லாத தலைவராக இருந்தாலும், திறமையுள்ள மலேசியரை அப்பதவியில் அமர்த்துவது தான் சிறப்பு என்கின்றனர் நிபுணர்கள்.

எனினும், இது குறித்து மேலும் பல விவாதங்கள் நடைபெற்று விரைவில் உள்நாட்டினரா? அல்லது வெளிநாட்டினரா? என்ற தீர்வு காணப்படலாம்.