Home Featured நாடு கோயில் சிலைகள் உடைப்பு விவகாரம்: காலிட்டுக்கும், டாக்டர் ஜெயேந்திரனுக்கும் இடையில் கருத்து மோதல்!

கோயில் சிலைகள் உடைப்பு விவகாரம்: காலிட்டுக்கும், டாக்டர் ஜெயேந்திரனுக்கும் இடையில் கருத்து மோதல்!

739
0
SHARE
Ad

ipohஈப்போ – ஈப்போ ஸ்ரீமுனீஸ்வரர் அம்மன் ஆலயத்தில் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்தில், இரண்டு விதமான கருத்துகள் நிலவி வருகின்றன.

சிலையை உடைத்த நபருக்கு மனநலப் பிரச்சனைகள் இருந்ததால், அவர் 2013-ம் ஆண்டு முதல் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார் என்கிறது காவல்துறைத் தரப்பு.

ஆனால், சுகாதார அமைச்சைச் சேர்ந்த துணை பொது இயக்குநர் டத்தோ டாக்டர் எஸ்.ஜெயேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி, அந்நபருக்கு மனநல பாதிப்பு இருந்ததற்கு ஆதாரமாக, சுகாதார அமைச்சில் எந்த ஒரு பதிவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனால் இந்த விவகாரத்தில் இவர்கள் இருவருக்குமிடையிலான கருத்து மோதல், மக்கள் மத்தியில் குழப்பத்தையே ஏற்படுத்தி வருகின்றது.

டாக்டர் ஜெயேந்திரன் அறிக்கை

இந்த விவகாரத்தில் டாக்டர் ஜெயேந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“அரசாங்க மருத்துவமனையில் மருத்துவராக பயிற்சி மேற்கொண்ட அந்நபருக்கு, மனநல பாதிப்பு இருந்தாகவும் கூறப்படுவது சுகாதார அமைச்சில் எங்குமே பதிவாகவில்லை.”

“மாநில சுகாதாரக் குழுவின் தலைவர் டத்தோ டாக்டர் மா ஹங் சூனும், தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரும், அந்நபருக்கு மனநல பாதிப்பு இருந்ததால் தான், அவர் அப்படி ஒரு காரியத்தில் ஈடுபட்டார் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.”

“அவர்கள் எங்கிருந்து அந்தத் தகவலை பெற்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அமைச்சிற்கு அது பற்றித் தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 11-ம் தேதி, பயிற்சி மருத்துவராகச் சேர்ந்த அந்நபர், 11 நாட்கள் பணியாற்றிவிட்டு தனது வேலையை இராஜினாமா செய்துள்ளார் என்றும், இரண்டு நாட்களுக்குப் பின் சிலைகளை அடித்து நொறுக்கியிருக்கிறார் என்றும் ஜெயேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “அந்நபர் மனநல சிகிச்சைக்காக பஹாகியா உலு கிந்தாவிற்கு அனுப்படுகின்றார். எனவே மனநல மருத்துவர் அவரைப் பரிசோதித்து என்ன சொல்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று டாக்டர் ஜெயேந்திரன் நேற்று மலாய் மெயில் இணையதளத்திடம் கூறியுள்ளார்.

ஐஜிபி எச்சரிக்கை 

இதனிடையே, டாக்டர் ஜெயேந்திரனின் அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாகக் கருத்துத் தெரிவித்துள்ள டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர், சரியான விசாரணைகள் இன்றி மக்களைக் குழப்பும் வகையில் கருத்துத் தெரிவிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பத்து கவானில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காலிட் அபு பக்கர், “அந்நபருக்கு மனநல பாதிப்பு இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று அரசாங்கப் பதிவுகளை வைத்து டாக்டர் ஜெயேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் நாங்கள் முழுவதுமாக விசாரணை நடத்திய பின் தான் அறிக்கை விடுத்துள்ளோம்.”

“அந்நபர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஈப்போ கேபிஜே தனியார் மருத்துவமனையில் மனநல சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார்” என்று தெரிவித்துள்ளார்.