Home Featured தொழில் நுட்பம் திறன்பேசி வாங்கப் போகிறீர்களா? – இந்த 6 முக்கிய அம்சங்களைக் கவனியுங்கள்!

திறன்பேசி வாங்கப் போகிறீர்களா? – இந்த 6 முக்கிய அம்சங்களைக் கவனியுங்கள்!

1373
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்றைய காலத்தில் திறன்பேசி என்பது நம்முடைய வாழ்வில் ஒரு அங்கமாகக் கலந்துவிட்டது. தகவல் தொடர்புக்கும், புகைப்படங்கள் எடுப்பதற்கும், ஆவணங்களை சேமித்து வைப்பதற்கும், இணையப் பயன்பாடுகளுக்கும் திறன்பேசிகள் நமக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன.

இப்படியிருக்க, சந்தையில் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பல இரகங்களில் திறன்பேசிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதில் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுப்பதில் பெரும்பாலானவர்களுக்கு குழப்ப நிலையே நீடித்து வருகின்றது. நமது வேலையிடம், திறன்பேசி பயன்பாட்டின் அளவு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஒரு திறன்பேசியை வாங்கும் போது அதன் வசதிகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்த முடிகின்றது.

புதிதாகத் திறன்பேசி வாங்க இருப்பவர்கள் இந்த 6 அம்சங்களைக் கவனித்தில் கொள்ள வேண்டும்:-

#TamilSchoolmychoice

1.கட்டமைப்பு

திறன்பேசியின் ஆயுளை அதன் கட்டமைப்பு தான் தீர்மானிக்கிறது. சந்தையில் இப்போது இரண்டு விதமான கட்டமைப்பில் திறன்பேசிகள் விற்கப்படுகின்றன. உலோகம் மற்றும் பிளாஸ்டிக்கால் ஆனவை.

smartphonesசில திறன்பேசிகள் கண்ணாடி பூச்சுக் கொண்ட பேனல்களாகவும் கிடைக்கின்றன. ஆனால் அவை மிகக் குறைவே.

எனவே, கட்டுமானப் பணியிடங்கள், தொழிற்சாலைகள் என கடினமான வேலைகளில் இருப்பவர்கள் கட்டமைப்பைத் தான் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலோகம் அல்லது பிளாஸ்டிக்கால் ஆன திறன்பேசிகளைத் தேர்ந்தெடுக்கும் போது, அவை 2 -3 அடியிலிருந்து கீழே விழுந்தாலும் தாங்கும்படியாகத் தான் அமைக்கப்பட்டிருக்கும்.

2. அளவு

அடுத்ததாக திறன்பேசியின் அளவும், திரையின் ஒளித்திறனும். அதிகமாகக் காணொளி பார்ப்பது, புகைப்படங்கள் அல்லது காணொளிகளைப் பதிவிறக்கம் செய்வது, போனில் திரைப்படம் பார்ப்பது போன்ற பயன்பாடுகளுக்கு 5.5 அங்குலம் முதல் 6 அங்குலம் வரையில் முழு எச்டி அல்லது கியூஎச்டி வசதி கொண்ட திறன்பேசிகளே போதுமானது. 6 அங்குலத்திற்கு மேலான அளவைத் தேர்ந்தெடுத்தால், அது கூடுதல் கனத்தைத் தருவதோடு, வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் சற்று சிரமமாக இருக்கும்.

samsung-galaxy-a8மற்றபடி, மின்னஞ்சல், பேஸ்புக், டுவிட்டர், வாட்சாப் போன்றவற்றை மட்டும் அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு 5.5 அங்குல எச்டி திறன்பேசியே போதுமானது.

3. மின்கலம் (பேட்டரி)

இது மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒரு அம்சம். ஏனென்றால் எவ்வளவு அழகான, வசதியான திறன்பேசியாக இருந்தாலும் பேட்டரியில் இருந்து அதிவிரைவில் சார்ஜ் தீர்ந்துவிட்டது என்றால், அதனை நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த முடியாது.

samsung-power-sleep-390x285அதேவேளையில், பயன்பாடுகளைப் பொறுத்தும் இது மாறுபடுகின்றது. அதிகமாகச் செயலிகளைப் பயன்படுத்துவது, விளையாட்டுகள், காணொளிகள் போன்றவற்றைப் பயன்படுத்துபவராக இருந்தால், 3500எம்ஏஎச் ( 3500mAh) அல்லது அதற்கும் கூடுதலான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது நன்று.

மிக எளிமையான பயன்பாடுகளுக்கு நாள் முழுவதும் பயன்படுத்த 3000 எம்ஏஎச் (3000mAh) பேட்டரியே போதுமானது.

4. சேமிப்புத் திறன் (Storage)

திறன்பேசிகளின் சேமிப்பில் பெரும்பங்கை இயக்குதளமும் (ஓஎஸ்), முன்பே பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் செயலிகளும் எடுத்துக் கொள்கின்றன.

iOS-7-teaser-iPhone-5s-ad-003-1024x57516ஜிபி, 32ஜிபி, 64ஜிபி என சொல்லி விற்கப்படும் திறன்பேசிகள் சரியாக அந்த அளவிலான சேமிப்புத் திறனைக் கொண்டிருப்பதில்லை. எனவே, நீங்கள் குறைவான செயலிகளைப் பயன்படுத்தும் நபராக இருந்தால் 32ஜிபி அளவிலான திறன்பேசியைத் தேர்ந்தெடுக்கலாம்.

அதிக அளவில் செயலிகளைப் பயன்படுத்துபவராக இருந்தால் 64ஜிபி அல்லது 128ஜிபி வரையில் பயன்படுத்தலாம். சில திறன்பேசிகள் 16ஜிபி சேமிப்புத் திறனோடு, மைக்ரோ எஸ்டி கார்டு மூலமும் கூடுதலாகச் சேமித்துக் கொள்ளும் வசதியைக் கொண்டிருக்கும் அதனையும் பயன்படுத்தலாம்.

5. கேமரா

இது இன்னொரு முக்கியமான வசதி. மெகாபிக்சல் அதிகமாக இருப்பதாகக் கூறப்படும் திறன்பேசிகளில் எல்லாம் சிறப்பாக படங்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்க முடியாது.

கேமராவின் பிக்சல் அளவு, ஆட்டோ போகஸ் வசதி, ஐஎஸ்ஓ அளவு, அபெர்சர் ( aperture) ஆகியவற்றைப் பொறுத்தே சிறந்த படங்களை எடுக்க முடியும்.

camera-mi16 மெகாபிக்சல் ரியர் கேமரா கொண்ட திறன்பேசி, 12 மெகாபிக்சல் கேமரா கொண்ட திறன்பேசியை விட சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

அதிகமான மெகாபிக்சல் இருந்தால் பெரிய அளவிலான படங்கள் எடுக்க முடியும். அதனை சிறிய திரையில் பார்க்கும் போது மிகவும் பளிச்சென கூர்மையாக இருக்கும். புகைப்பட விரும்பிகள் 12 அல்லது 16 எம்பி கேமராவுடன் f/ 2.0 அல்லது இன்னும் குறைவான அபெர்சர் வசதி கொண்ட வெளிச்சம் குறைவான பகுதிகளில் கூட வேகமாகப் படம் பிடிக்கும் திறன்பேசிகளையே விரும்புகிறார்கள்.

புகைப்படங்களில் அதிக வசதிகளை எதிர்பார்க்காதவர்களுக்கு 8 எம்பி அல்லது 12 எம்பி கேமராவுடன் f/2.0-f/2.2 அபெர்சர் வசதி கொண்ட திறன்பேசிகளே போதுமானது.

6. நிறுவனம் அல்லது பிராண்ட்

இது எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று. ஏனென்றால், சந்தையில் இப்போது மூன்று வகையான விற்பனை நடைபெறுகின்றது. ஒன்று ஆப்பிள், சாம்சுங், எச்டிசி, நோக்கியா போன்ற புகழ்பெற்ற பிராண்டு திறன்பேசிகளோடு, விவோ, சியோமி, எல்ஜி, லெனோவா போன்ற இரண்டாம் நிலை பிராண்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றில் முதல்நிலையில் இருக்கும் திறன்பேசிகள் அதிக விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், அதனை விட சற்று விலைக் குறைவில் இரண்டாம் நிலையில் இருக்கும் திறன்பேசிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

smartphonesiஇந்த இரண்டு நிலையில் இருக்கும் திறன்பேசிகளுக்கும் பெரும்பாலும் சர்வீஸ் செண்டர்கள் என்று சொல்லக் கூடிய சேவை மையங்கள் விற்பனை செய்யப்படும் மாநகரங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. எதிர்பாராதவிதமாக திறன்பேசிகள் கீழே விழுந்து அதன் திரை நொறுங்கிவிட்டாலோ அல்லது ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலோ நகரங்களில் அமைந்திருக்கும் அதன் சேவை மையங்களில் கொடுத்து அதனை சரி செய்து கொள்ளலாம்.

ஆனால், மூன்றாம் நிலையில் சில பிராண்டுகள் இருக்கின்றன. அவை உள்ளூரிலே புதிதாகத் துவங்கப்பட்டிருக்கும் நிறுவனங்களாக இருக்கும். அல்லது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிராண்டுகளாக இருக்கும். பார்ப்பதற்கு மிக அழகாகவும், ஆப்பிள், சாம்சுங்கிற்குப் போடியான வசதிகளுடனும் இருக்கும். ஆனால் மிகக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும். அடடா.. இவ்வளவு விலை குறைவா? என்று ஆச்சரியப்பட்டு வாடிக்கையாளர்கள் அதில் சிக்கிவிட வாய்ப்பு இருக்கிறது.

இது போன்ற சந்தையில் புதிதாக அறிமுகமாகும் பிராண்டுகளை வாங்கிப் பயன்படுத்தும் போது ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், அதனை சரி செய்வதற்கு நகரங்களில் எங்குமே சேவை மையங்கள் இருக்காது என்பதோடு, அதன் பாகங்களும் புதிதாகக் கிடைக்காது.

அதன் பின்னர் அந்தத் திறன்பேசியைப் பயன்படுத்தவே முடியாத நிலை ஏற்படும். எனவே விலை சற்று அதிகம் என்றாலும் பல இடங்களில் சர்வீஸ் செண்டர்கள் இருக்கக் கூடிய புகழ்பெற்ற பிராண்டு திறன்பேசியைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

-செல்லியல் தொகுப்பு