Home Featured நாடு மஇகா: பகாங் குணசேகரனின் செனட்டர் பதவி யாருக்கு?

மஇகா: பகாங் குணசேகரனின் செனட்டர் பதவி யாருக்கு?

777
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை ஜூன் 22-ஆம் தேதியோடு மஇகா சார்பில் நாடாளுமன்ற மேலவையில் செனட்டர்களாக இருக்கும் இருவரின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது.

அவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கு மேலும் ஒரு தவணைக்கு, அதாவது அடுத்த மூன்றாண்டுகளுக்கு, அவருடைய செனட்டர் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 22 ஜூன் 2020 வரை விக்னேஸ்வரன் செனட்டராகப் பதவி வகிப்பார்.

இருப்பினும், பதவிக் காலம் முடிவுறும் மற்றொரு செனட்டரான பகாங் மாநில மஇகா தலைவர் டத்தோ ஆர்.குணசேகரனுக்கு (படம்) செனட்டர் பதவி மற்றொரு தவணைக்கு நீட்டிக்கப்படவில்லை என மஇகா வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக மஇகா சார்பில் செனட்டராகப் போகிறவர் யார் என்ற ஆரூடங்கள் மஇகா வட்டாரங்களில் பரபரப்பாக உலவி வருகின்றன.

யார் அடுத்த செனட்டர்?

தற்போது மஇகாவில் முக்கியப் பொறுப்பு வகிப்பவர்களில் ஒருவருக்குத்தான் செனட்டர் பதவி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், தலைமைச் செயலாளர் டத்தோ அ.சக்திவேல், தலைமைப் பொருளாளர் டத்தோஸ்ரீ வேள்பாரி சாமிவேலு, இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ், மகளிர் பகுதித் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி ஆகியோரின் பெயர்கள் தேசியத் தலைவரின் பரிசீலனையில் இருக்கின்றன என மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் புதிய செனட்டராக நியமிக்கப்படப் போகிறவர் யார் என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்து விடும்.

மேலே பெயர் குறிப்பிடப்பட்டிருப்பவர்களில் ஒருவருக்குத்தான் அடுத்த செனட்டருக்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.