Home நாடு “அரண்மனை பெயரை தவறாகப் பயன்படுத்தியவர்கள் குண்டர்களைப் போன்றவர்கள்” பகாங் சுல்தான் ஆவேசம்

“அரண்மனை பெயரை தவறாகப் பயன்படுத்தியவர்கள் குண்டர்களைப் போன்றவர்கள்” பகாங் சுல்தான் ஆவேசம்

532
0
SHARE
Ad

KL31_170311_SULTAN_FIFAகேமரன்மலை, நவம்பர் 21 – நேற்று முன்தினம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் கேமரன் மலை பகுதிக்கு வருகை தந்த பகாங் மாநில சுல்தான்அகமட் ஷா (படம்), கேமரன் மலையில் முறைகேடாக விவசாயம் மேற்கொள்வதற்கு ஒரு சிலர் பயன்படுத்தி வரும் ‘மஞ்சள்’ (அரண்மனையின் அதிகாரபூர்வ நிறம்) கடிதங்களுக்கும் அரண்மனைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என பகாங் சுல்தான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அத்தகைய நபர்கள் அரண்மனையின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தும் குண்டர்கள்
என்று கோபத்துடன் குறிப்பிட்ட அவர், சட்டத்தை மீறும் உரிமை என்பது தனக்கு
மட்டுமல்லாது எவருக்குமே இல்லை என்றார்.

“அந்தக் குண்டர்கள் யாரெனத் தெரிந்தால் ஓங்கி ஒரு குத்துவிடுவேன். நீங்கள் குண்டர்கள் என்று ஒருமுறை பெயரெடுத்துவிட்டால், எப்போதுமே குண்டர்கள்தான். முறைகேடான விவசாயத்திற்காக சிலர் பயன்படுத்தும் மஞ்சள் கடிதங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனினும் முறைகேடான விவசாயத்தை அனுமதிக்க இயலாது. இதற்கு எப்படியும் முடிவு கட்டுவோம். மிக விரைவில் அத்தகையவர்களில் நூற்றுக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்படுவர்,” என்றார் சுல்தான் அகமட் ஷா.

#TamilSchoolmychoice

தற்போதைய நிலைமையைச் சமாளிக்க பகாங் மாநிலத்திடம் போதுமான நிதி மற்றும்
இதர இயற்கை ஆதாரங்கள் இல்லாத நிலையில், கூட்டரசு நிர்வாகம் இதற்காக கைகொடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே முறைகேடான விவசாயம்தான் கேமரன் மலையில் ஏற்பட்டுள்ள தற்போதைய சீரழிவுக்குக் காரணம் என்பதை ஒப்புக்கொண்ட அவர், இதற்கு காரணமான அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றார்.

கேமரன் மலையில் ஏற்பட்ட சகதியுடன் கூடிய வெள்ளப்பெருக்கில் சிக்கி 15 வயது சிறுவன் உட்பட 5 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுல்தான் பார்வையிட்டார்.

“எங்கு பார்த்தாலும் சகதியும், குப்பையுமாக உள்ளது. 6 மாதங்களிலாவது இவை
எல்லாம் அகற்றப்படுமா? இங்குள்ள பிள்ளைகள் எவ்வாறு பள்ளிக்குச் செல்ல
முடியும்?” என்றும் அவர் கவலையுடன் கேள்வி எழுப்பினார்.