Home உலகம் தமிழகத்தின் 14 மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்தது!

தமிழகத்தின் 14 மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்தது!

491
0
SHARE
Ad

Rameswaram Bamban bridgeசென்னை, நவம்பர் 23 – தமிழகத்தின் மீனவர்களை மீண்டும் மீண்டும் கைது செய்து காவலில் வைக்கும் இலங்கை கடற்படையின் போக்கு பலத்த கண்டனங்களுக்கிடையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

அண்மையில்தான், ஐந்து தமிழக மீனவர்களுக்கு போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டி தூக்குத் தண்டனை விதித்தது இலங்கை அரசாங்கம். மோடியின் மத்திய அரசாங்கத்தின் தலையீட்டால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு, தமிழக அரசும் அவர்களுக்கு தலா 3 இலட்ச ரூபாய் வழங்கி ஆதரவளித்தது.

இப்போது மீண்டும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்துள்ளது.

#TamilSchoolmychoice

கச்சத்தீவு அருகே அனைத்துலக கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ளனர்.

அனைத்துலக கடல் எல்லைப் பகுதியில் ராமேசுவரம் மீனவர்கள் மீன்களை பிடித்து கொண்டிருந்த போது அப்போது  ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இலங்கை எல்லை கடல்பகுதியில்  மீன்பிடிக்கக்கூடாது என எச்சரித்ததால் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் தங்களின் வலைகளை கடலிலேயே போட்டு விட்டு கரை திரும்பினர்.

இதில் எரிபொருள் (டீசல்) தீர்ந்து போனதால் நம்புசேகரன் என்பவரின் படகு மட்டும் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் நின்று கொண்டிருந்தது. இன்று காலை அந்தப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நம்புசேகரன் விசைப்படகை கைப்பற்றி, அதிலிருந்த களஞ்சியம், ஜான்போஸ்கோ, சரவணன், சேவியர் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

மேலும், ஜெகதாப்பட்டினத்தை சார்ந்த இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைபற்றினர். அதிலிருந்த 10 மீனவர்கள் என மொத்தம் 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.