Home நாடு லாகாட் டாத்துவில் காணாமல் போன இத்தாலியரை தேடும் பணி தீவிரம் 

லாகாட் டாத்துவில் காணாமல் போன இத்தாலியரை தேடும் பணி தீவிரம் 

667
0
SHARE
Ad

Lahad Datu Location Mapகோத்தாகினபாலு, அக்டோபர் 21 – சபாவின் கிழக்கு கடலோர மாவட்டமான லாகாட் டாத்துவில் காணாமல் போன இத்தாலிய ஆடவரை தேடும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

52 வயதான வில்லியம் போச்சி என்ற அந்நபர் கடந்த வாரம் இப்பகுதிக்கு வந்துள்ளார். திடீரென மாயமான அவரைப் பற்றி இப்பகுதியில் உள்ள தங்குவிடுதிகள், மருத்துவமனைகளில்  விசாரித்து வருவதாக சபா காவல்துறை ஆணையர் டத்தோ ஜலாலுடின் ரஹ்மான் தெரிவித்தார்.

கடந்த 12ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கினார் வில்லியம் போச்சி. பின்னர் கோத்த கினபாலு சென்ற அவர் அடுத்த நாள் லாகாட் டாத்து சென்றடைந்துள்ளார்.

#TamilSchoolmychoice

13ஆம் தேதி மதியம் 1.05 மணிக்கு லாகாட் டாத்து வந்தடைந்த பின்னர் காணாமல் போயுள்ளார் வில்லியம். அவர் காணாமல் போனது குறித்து சியா யிக் ஹுவான் என்ற உள்ளூர் வர்த்தகர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

“இத்தாலியில் உள்ள வில்லியம் போச்சியின் நண்பர் ஃபேபியோ என்பவர் அனுப்பிய மின்னஞ்சலில் அக்டோபர் 16ஆம் தேதி வில்லியம் இத்தாலி திரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கோலாலம்பூரில் உள்ள நண்பர் எனக்கு தகவல் அனுப்பினார். நிதி சேவை தொடர்பிலான தொழிலில் ஈடுபட்டிருந்த வில்லியம் ஒரு விநியோக நிறுவனத்தின் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்தார். லாகாட் டாத்துவில் உள்ள ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காகவே அவர் இங்கு வந்ததாக அறிகிறேன்,” என்று சியா யிக் ஹுவான் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் மாயமான வில்லியமை தேடும் பணி தீவிரமடைந்துள்ளதாக சபா காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்