Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: திமுக தலைமையின் கீழ் காங்கிரஸ் கூட்டணி!

தமிழகத் தேர்தல்: திமுக தலைமையின் கீழ் காங்கிரஸ் கூட்டணி!

975
0
SHARE
Ad

சென்னை – தமிழகத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சிகள் எவ்வாறு கூட்டணி அமைக்கப் போகின்றன என்ற கேள்வி அனைவரின் மனங்களிலும் எழுந்துள்ள நிலையில், திமுகவும், காங்கிரசும் இணைந்து போட்டியிட நேற்று இணக்கம் காணப்பட்டுள்ளது,

நேற்று திமுக தலைவர் கருணாநிதியுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Karunanithi-gulam nabi-talks on alliance-நேற்றைய பேச்சு வார்த்தையின்போது கருணாநிதி, முக.ஸ்டாலின், கனிமொழி, குலாம் நபி ஆசாத், இளங்கோவன் ஆகியோர்….

#TamilSchoolmychoice

காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத், தமிழ்நாடு பொறுப்பாளர் முகுல்வாஸ் நிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கோபிநாத் ஆகியோர் நேற்று காலை 11.30 மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு வந்து அவரை சந்தித்து தேர்தல் கூட்டணி மற்றும் இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

இந்த சந்திப்பில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சுமார் ஒரு மணிநேரம் நடந்த பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத் கூட்டணி ஏற்பட்டுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந்தக் கூட்டணிக்கு திமுக தலைமையேற்கும் எனக் குறிப்பிட்ட குலாம், “எங்கள் கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியமைக்கும். வேறு கட்சிகளையும் இணைத்து வலுவான கூட்டணியை, யாராலும் வெல்ல முடியாத கூட்டணியை திமுக உருவாக்கும். கூட்டணியின் மற்ற கட்சிகள் எவை என்பதை திமுகவே முடிவு செய்யும்” என்றும் கூறியுள்ளார்.

இப்போதைக்கு எங்களது இலக்கு திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதுதான் என்றும் ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து பின்னர் விவாதிக்கப்படும் என்றும் மேலும் அவர் கூறியுள்ளார்.

2013 -இல் இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியது. அப்போது காங்கிரசுடனான உறவை “கூடா நட்பு” என திமுக விவரித்திருந்தது. அந்த பிரச்சனை தீர்ந்து இப்போது கூடா நட்பு “கூடிய’ நட்பாகிவிட்டது.

இது குறித்து பதிலளித்த குலாம், “அரசியல் கட்சிகளிடையே சில நேரங்களில் சில பிரச்சனைகள் ஏற்படுவது இயல்புதான். திமுகவுடன் நல்ல புரிந்துணர்வு உள்ளது. இப்போது சுமுக உறவு நிலவுகிறது” என்று தெரிவித்தார்.

Karunanithi-Congress-DMK-alliance-meetபேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கும் திமுக-காங்கிரஸ் தலைவர்கள்…