Home Featured தமிழ் நாடு ராம்குமார் தற்கொலை : தொடரும் மர்மங்கள்! (இறுதி நிலவரம்)

ராம்குமார் தற்கொலை : தொடரும் மர்மங்கள்! (இறுதி நிலவரம்)

933
0
SHARE
Ad

Ramkumar-chennai-swathi-murderer

சென்னை – இன்று ஞாயிற்றுக்கிழமை புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சுவாதி கொலை வழக்கு குற்றவாளி ராம்குமார் மரணம் தொடர்பில் பல கேள்விகளும், மர்மங்களும் எழுந்துள்ளன.

அவரது தந்தை பரமசிவம் ராம்குமார் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ராம்குமார் மரணம் தொடர்பில் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய நேரப்படி இன்று மாலை 4.45 மணியளவில் ராம்குமார், மின்கம்பியைக் கடித்து தற்கொலை முயற்சிக்கு முயன்றதாகவும், தொடர்ந்து மின்கம்பியை உடலில் செலுத்திக் கொண்டதாலும் உயிரிழந்தார் என சிறைத் துறை விளக்கம் அளித்துள்ளது.

ராம்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டாலும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் தற்போது ராயப்பேட்டை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கின்றது. மருத்துவமனையைச் சுற்றி பலத்த காவல் போடப்பட்டிருக்கின்றது.

கடந்த ஜூன் 24ஆம் தேதி சுவாதி என்ற இன்போசிஸ் பெண் பணியாளர் நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை 1-ஆம் தேதி ராம்குமார் அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.

ராம்குமார் கைது செய்யப்பட்டபோதே அவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக காவல் துறையினர் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில், சிறையின் சமையலறைப் பகுதியில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளதால், அங்கு அவர் எப்படி சென்றார் என்பது போன்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

ராம்குமாரின் வழக்கறிஞர் இந்திய நேரப்படி இரவு 7.30 மணியளவில் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்ததைத் தொடர்ந்து அங்கு கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அங்கு பத்திரிக்கையாளர்களும் ஏராளமாகக் குழுமியுள்ளனர்.