நேற்று அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்ற விருந்தொன்றில் உரையாற்றிய போது யாரும் எதிர்பாராத வண்ணம் இந்த திடீர் அறிவிப்பை அவர் செய்தார்.
தனது உரையில், அனைவரும் காஜாங் இடைத் தேர்தலுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனக் கூறிய அவர், தான் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்ததும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
காஜாங் இடைத் தேர்தல் நடைபெறப் போகும் தருணத்தில் இந்த அறிவிப்பை காலிட் செய்துள்ளது பிகேஆர் வட்டாரத்தில் பலத்த வாதப் பிரதிவாதங்களை முடுக்கிவிட்டிருக்கிறது என்பதோடு, ஏன் இந்த நேரத்தில் கட்சியைப் பிளவுபடுத்தும் வண்ணம் அவர் இந்த அறிவிப்பைச் செய்ய வேண்டும் என்ற கருத்தும் நிலவுகின்றது.
காலிட்டுக்கும் அஸ்மின் அலிக்கும் இடையில் தொடர்ந்து கொண்டிருக்கும் உட்கட்சி அரசியல் போராட்டத்தின் உச்ச கட்டமாக மே மாதம் நடைபெறும் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் போட்டி இருக்கும். இரண்டாவது தவணையாகப் போட்டியிடவிருக்கும் அஸ்மினை எதிர்த்துத்தான் காலிட் போட்டியில் குதிக்கவிருக்கின்றார்.
எதிர்வரும் தேர்தலில் கட்சியின் தேசியத் தலைவராக அன்வார் இப்ராகிம் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காஜாங் இடைத் தேர்தலுக்கு முன்பாக அவசரம் அவசரமாக நீர்ப் பங்கீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் காலிட் கையெழுத்திட்டதும், அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என அன்வார் அறிவித்ததும் கூட அண்மையில் ஒரு சர்ச்சையாக உருவெடுத்தது.
அதிலும் கட்சித் தேர்தல் நடைபெறும் காலத்திற்குள், அன்வார் சிலாங்கூர் மாநிலத்தின் மந்திரி பெசார் ஆகிவிட்டால், அதற்குப் பின்னர் எந்தவிதப் பதவி பலமும் இல்லாமல் அஸ்மின் அலியை எதிர்கொள்வது காலிட்டுக்கு கடுமையான போராட்டமாகவே இருக்கும்.