Home நாடு எம்எச்17 பயணிகளின் குடும்பத்தினருக்கு எம்எச்370 குடும்பத்தினர் ஆறுதல்!

எம்எச்17 பயணிகளின் குடும்பத்தினருக்கு எம்எச்370 குடும்பத்தினர் ஆறுதல்!

410
0
SHARE
Ad
mh17-malaysia-airlines-plane

கோலாலம்பூர், ஜூலை 31 – கடந்த மார்ச் 8 -ம் தேதி, கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கி பயணித்த மாஸ் விமானம் எம்எச்370 நடுவானில் மாயமானது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், அதில் பயணித்த பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் குடும்பத்தினர்கள், கடந்த ஜூலை 17 -ம் தேதி கிழக்கு உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 -ல் பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல்களும், ஆலோசனைகளும் கூறி வருகின்றனர்.

இதனிடையே, அக்கோர சம்பவத்தில் பலியான மலேசியர்களின் சடலங்களை மலேசியாவிற்கு திரும்பக் கொண்டு வரும் பணி மிக விரைவாக நடந்து வருகின்றது.

“இது போன்ற அசம்பாவிதங்கள் யாரும் விருப்பப்பட்டு நடப்பதில்லை. விதியின் விளையாட்டாகவே எதிர்பாராதவிதமாக நடக்கின்றது” என்று எம்எச்370 விமான மேற்பார்வையாளரின் மனைவி ஜேக்குய்தா கொன்சாலெஸ் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் எம்எச்370 காணாமல் போன போது ஆரம்ப இருந்த மனநிலையில் தற்போது இவர்கள் (எம்எச்17 -ல் பாதிக்கப்பட்டவர்கள்) இருக்கின்றார்கள். அவர்களின் வலியும் வேதனையையும் எங்களால் புரிந்துக் கொள்ள முடிகிறது” என ஆறுதல் கூற வந்தவர்கள் கூறினர்.

எம்எச்17 விமான பணிப் பெண் ஒருவரின் அண்ணனான மூர்பி கோவிந்த், “ரமலானுக்கு முன் உடல்களை மீட்காதது வருத்தமாகத் தான் உள்ளது. இருந்தாலும் அது நம் கையில் இல்லை. நல்லதே நடக்கும் என்று நம்புவோம். டச்சுக்காரர்களின் உதவியோடு உடல்களை மீட்கும் பணி நடப்பதால் மீட்புப்பணி மிக விரைவாக நடக்கும்” என்று கூறினார்.

மேலும் கொன்சாலெஸ் கூறுகையில், எம்எச்370 மாயமாகி, பயணிகளுக்கு என்ன ஆனது என்றே தெரியாமல் இன்று வரை தவிக்கும் நிலை, எம்எச்17 பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படவில்லை என்பது மனதிற்கு சற்று ஆறுதலாக உள்ளது என்று கூறினார்.

கடந்த ஜூலை 17 -ம் தேதி ஆம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு வந்து கொண்டிருந்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்17, கிழக்கு உக்ரைன் அருகே கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் பலியானார்கள்.

இந்நிலையில் காணாமல் போன எம்எச்370 விமானத்தை அமெரிக்கா, ரஷ்ய, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இன்று வரை தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.