Home கலை உலகம் நடிகர் வி.எஸ்.ராகவன் மரணம்: ஜெயலலிதா இரங்கல், திரையுலகினர் அஞ்சலி!

நடிகர் வி.எஸ்.ராகவன் மரணம்: ஜெயலலிதா இரங்கல், திரையுலகினர் அஞ்சலி!

492
0
SHARE
Ad

VSRagavanசென்னை, ஜனவரி 26 – பழம்பெரும் திரைப்பட நடிகர் வி.எஸ்.ராகவன் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு திரைப்படத் துறைக்கும், கலைத்துறைக்கும் பேரிழப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-– “பழம்பெரும் திரைப்பட நடிகர் வி.எஸ்.ராகவன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 89-வது வயதில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன்”.

“வி.எஸ்.ராகவன் பத்திரிகை துறையில் உதவி ஆசிரியராக தனது பணியினை தொடங்கி பின்பு படிப்படியாக நாடகத்துறையிலும், திரைப்பட துறையிலும் காலடி எடுத்து வைத்தார்”.

#TamilSchoolmychoice

“1954-ம் ஆண்டு வெளிவந்த ‘வைரமாலை’ என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்து 58 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றார்”.

“இவர் ஆயிரம் திரைப்படங்களுக்கும் மேல் நடித்தவர் என்பது மட்டுமல்லாது, வானொலி நாடகங்களிலும், சின்னத்திரையிலும் தொடர்ந்து நடித்தவர் என்ற பெருமைக்குரியவர்”.

“அனைவரிடமும் அன்புடனும், நட்புடனும் பழகும் குணம் கொண்ட வி.எஸ்.ராகவனின் இழப்பு திரைப்படத்துறைக்கும், கலைத்துறைக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்”.

“வி.எஸ். ராகவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என ஜெயலலிதா கூறியுள்ளார்.

நடிகர்கள் அஞ்சலி:

வி.எஸ்.ராகவன் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மந்தை வெளியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. வி.எஸ்.ராகவன் உடலுக்கு நடிகர்கள் சிவகுமார், ராதாரவி, மன்சூர் அலிகான், சார்லி,

இயக்குநர்கள் வாசு, சி.வி.ராஜேந்திரன், மனோபாலா, காற்றாடி ராமமூர்த்தி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்பு அவரது உடல் நேற்று மாலையில் பெசன்ட்நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.