Home உலகம் ஒபாமா, மோடி, உள்பட 31 உலகத் தலைவர்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிவு!

ஒபாமா, மோடி, உள்பட 31 உலகத் தலைவர்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிவு!

650
0
SHARE
Ad

g20ஆஸ்திரேலியா, மார்ச் 31 – அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களின் பாஸ்போர்ட் எண், விசா விவரங்களை ஆஸ்திரேலியக் குடிநுழைவுத் துறை ஊழியர் ஒருவர் வெளியே கசிய விட்டதாக லண்டனிலிருந்து வெளியாகும் “தி கார்டியன்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் நரேந்திர மோடி, ஒபாமா, ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜீ ஜின் பிங் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஒபாமா உள்பட 31 தலைவர்களின் தனிப்பட்ட விவரங்களை ஆஸ்திரேலியக் குடிநுழைவுத் துறை உழியர் ஒருவர், மின்னஞ்சல் மூலம் தவறுதலாக வெளியே கசிய விட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

இதுகுறித்து லண்டனிலிருந்து வெளிவரும் “தி கார்டியன்’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. மோடி, ஒபாமா, புதின், டேவிட் கேமரூன், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்பட 31 பேரின் பிறந்த தேதி, சொந்த நாடு, விசா எண், பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட விவரங்கள் வெளியே கசிந்துள்ளதாக அந்தச் செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய கால்பந்துப் போட்டி அமைப்பாளர்களுக்கு, இந்த விவரங்களை ஆஸ்திரேலிக் குடிநுழைவுத் துறை ஊழியர் ஒருவர், தவறுதலாக மின்னஞ்சல் மூலம் கடந்த நவம்பர் மாதம் அனுப்பியதாகத் தெரிகிறது.

இந்த விவரத்தை சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் தெரிவிக்குமாறு ஆஸ்திரேலியக் குடிநுழைவுத் துறை அதிகாரிகள், தங்களது கீழ்நிலை அதிகாரிகளை முதலில் அறிவுறுத்தியுள்ளனர்.

79004800_024738464-1ஆனால், அதன் பிறகு அந்தத் தகவலை எவருக்கும் தெரிவிக்க வேண்டிய தேவையில்லை என்று குடிநுழைவுத் துறை அதிகாரிகள் எண்ணியதாக “தி கார்டியன்’ நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

எவ்வித உள்நோக்கமுமின்றி, அனிச்சையாக இந்தப் பிழை நேர்ந்திருப்பதாகவும், தலைவர்களின் தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய மின்னஞ்சல் தவறுதலாக ஆசிய கால்பந்துப் போட்டி அமைப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் ஆஸ்திரேலியக் குடிநுழைவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட தகவல்கள் மேலும் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தனது விளக்கக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாடை நேரில் சந்தித்த அந்நாட்டின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தான்யா பிலிபெர்செக்,

“தனிப்பட்ட விவரங்கள் வெளியே கசிந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் தெரிவிக்காதது ஏன்?’ என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.