Home அவசியம் படிக்க வேண்டியவை சரக்கு ஏற்றிய ஊழியர் உள்ளே தூங்குவது தெரியாமல் புறப்பட்ட விமானம்

சரக்கு ஏற்றிய ஊழியர் உள்ளே தூங்குவது தெரியாமல் புறப்பட்ட விமானம்

446
0
SHARE
Ad

நியூயார்க், ஏப்ரல் 15 – விமானத்தில் சரக்குகள் வைக்கும் பகுதியில் பல்வேறு சரக்குகளை ஏற்றிய ஊழியர், அசதி காரணமாக அங்கேயே படுத்து உறங்கிவிட, அவர் உள்ளே இருப்பது தெரியாமலேயே விமானத்தை கிளப்பிச் சென்றுவிட்டார் விமானி.

இந்த ருசிகரமான, அதே சமயம் பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளையும் எழுப்பிய சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறி உள்ளது.

Aeroplaneகடந்த திங்கட்கிழமையன்று சியாட்டல் நகரில் இருந்து அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கி புறப்பட்டுச் சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, சரக்குப் பகுதியில் தூக்கத்திலிருந்து கண்விழித்த அந்த ஊழியர், கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.

#TamilSchoolmychoice

விமானத்தின் சரக்குப் பிரிவில் தட்ப வெப்ப சூழ்நிலை வித்தியாசமாக இருக்கும். குளிர்சாதன வசதி இல்லாத அந்த இடத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க இயலாது என்பதை உணர்ந்த அந்த ஊழியர் பயத்தில் குரலெழுப்ப ஆரம்பித்தார்.

சரக்குப் பகுதியின் மேல்தளத்தை தனது கைகளால் பலம் கொண்ட மட்டும் குத்தியதுடன், உதவி கேட்டும் குரல் கொடுத்துள்ளார். நல்லவேளையாக அவரது கூக்குரல் அந்த விமானத்தின் விமானிகளில் ஒருவரது காதில் விழுந்தது.

இதையடுத்து சியாட்டல் நகரில் இருந்து புறப்பட்டு 14 நிமிடங்கள் வானில் பறந்த அந்த விமானத்தை மீண்டும் அதே விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்க தரைக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் விமானிகள் அனுமதி கேட்டனர்.

உடனடியாக அனுமதி கிடைக்கவே, விமானம் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அதன் சரக்குப் பகுதிக்குள் அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர்.

அப்போது, சரக்குகளை ஏற்றி, இறக்கும் அந்த ஊழியர் வெளியே வந்தார். சரக்குகளை ஏற்றிய அசதியில் விமானம் புறப்பட்டது கூட தெரியாமல் சற்று நேரம் தன்னை மறந்து உறங்கி விட்டதாக கூறிய அவரை அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவி அளித்தனர்.

அவர் நலமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அதிகாரிகள், அவரது இச்செய்கை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.