Home தொழில் நுட்பம் கூகுள், பேஸ்புக்கிற்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை!

கூகுள், பேஸ்புக்கிற்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை!

333
0
SHARE
Ad

putinமாஸ்கோ, மே 22 – கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்கள் தங்கள் நாட்டுச் சட்ட திட்டங்களுக்குப் புறம்பாக நடந்து கொள்வதாக ரஷ்ய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலை நீடித்தால் எந்நேரத்திலும் இந்த மூன்று தளங்களும் ரஷ்யா முழுவதும் முடக்கப்படலாம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்யாவின் இணைய பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராஸ்காம்னட்சார் கூறுகையில், “மூன்று அமெரிக்க இணைய நிறுவனங்களுக்கும் எங்கள் நாட்டின் இணைய சட்ட திட்டங்களை மீறி வருவது குறித்துக் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளோம். இது தற்போது வாடிக்கையாகி விட்டது.”

“இனியும் இது தொடர்ந்தால், மூன்று தளங்களும் எந்நேரத்திலும் முடக்கப்படலாம். ரஷ்யாவிற்கு எதிரான கருத்துக்களைப் பரப்பி வரும் இணையவாசிகளுக்கு இம்மூன்று நிறுவனங்களும் ஆதரவு அளித்து வருகின்றன. அரசுக்கு எதிராகச் செயல்படுபவர்களைப் பற்றித் தகவல் தெரிவிக்குமாறு மூன்று நிறுவனங்களிடம் பலமுறை வலியுறுத்தியும், அவற்றை ஏற்க நிறுவனங்கள் மறுத்து வருகின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ரஷ்யாவின் இந்த மிரட்டலுக்கு உடனடியாகப் பதில் அளித்துள்ள பேஸ்புக் நிறுவனம், “ரஷ்யா-உக்ரைன் விவகாரம் தொடர்பாகச் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துக்களை நாங்கள் தொடர்ந்து நீக்கி வருகின்றோம். மேலும், அந்நாட்டு அரசு கேட்டுள்ள பயனர்களின் தகவல்களையும் சேகரித்து வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளது.

டுவிட்டர் நிறுவனமும், ரஷ்ய அரசின் கோரிக்கையை ஏற்று நடப்பதாகத் தெரிவித்துள்ளது. இது பற்றிக் கூகுள் நிறுவனம் கூறுகையில், “கடந்த 2014-ம் ஆண்டில் ரஷ்ய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 5 சதவீத பயனர்களின் விவரங்களை அளித்துள்ளோம். மேலும், பாதுகாப்பு தொடர்பான அனைத்துச் சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டே நாங்கள் செயல்பட்டு வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளது.