Home Featured நாடு விரைவில் சாஹிட் பிரதமராகப் பதவி ஏற்கப்போகிறாரா?

விரைவில் சாஹிட் பிரதமராகப் பதவி ஏற்கப்போகிறாரா?

656
0
SHARE
Ad

zahidகோலாலம்பூர் – விரைவில் அகமட் சாஹிட் ஹமீடி பிரதமராகப் பதவி ஏற்கப் போகிறாரா? என்று ஜசெக கட்சியின் தேசிய உதவித் தலைவரும், செப்புத்தே நாடாளுமன்ற உறுப்பினருமான திரேசா கோக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மலேசியாகினி இணையதளத்திற்கு அனுப்பிய பிரத்யேகக் கட்டுரை ஒன்றில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற பெர்சே 4 பேரணி குறித்தும், அப்பேரணியில் பெரும்பாலானோர் நஜிப் துன் ரசாக்கை பதவி விலகுமாறு வலியுறுத்தியது குறித்தும் தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இதனிடையே அதே கட்டுரையில் துணைப் பிரதமராக அண்மையில் பதவி ஏற்றுள்ள சாஹிட் ஹமீடி குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று பூச்சோங் தொகுதி அம்னோ கூட்டத்தில் கலந்து கொண்ட சாஹிட் ஹமீடி அங்கு கூடியிருந்த தேசிய மொழி ஊடகங்களிடம், அடுத்த பொதுத்தேர்தலில் சீனர்களும், இந்தியர்களும் தேசிய முன்னணிக்கு வாக்களிக்கும் படி அவர்களை மாற்றும்படி கேட்டுக் கொண்டதாக திரேசா குறிப்பிட்டுள்ளார்.

“வாக்காளர்களை தேசிய முன்னணிக்கு வாக்களிக்க வைப்பது தான் செய்தியாளர்களின் பணியா? அப்படியானால் தேசிய முன்னணிக்கு ஆதரவாக ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்பது தான் சாஹிட் கருத்தின் உள்ளார்ந்த அர்த்தமா?” என்றும் திரேசா கோக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், எதிர்கட்சிகளிடமிருந்து சிலாங்கூர் மாநிலத்தை மீட்டெடுத்தால், அமைச்சரவையில் சிலாங்கூர் தேசிய முன்னணி தலைவர்களுக்கு இரண்டு முழு அமைச்சர் பதவி அளிப்பதாகவும் பெட்டாலிங் ஜெயா செலாத்தான் அம்னோ கூட்டத்தில் சாஹிட் உறுதியளித்துள்ளதையும் திரேசா மேற்கோள் காட்டியுள்ளார்.

“அமைச்சர்களை நியமனம் செய்வது பிரதமருக்கு இருக்கும் பிரத்யேக அதிகாரங்களில் ஒன்று, அதை எப்படி ஒரு துணைப் பிரதமர் தன்மூப்பாக உறுதியளிக்கிறார்?” என்றும் திரேசா கோக் கேள்வி எழுப்பியுள்ளார்.