Home Featured நாடு கோலாலம்பூரில் 10 தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் – காவல்துறை அதிர்ச்சித் தகவல்!

கோலாலம்பூரில் 10 தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் – காவல்துறை அதிர்ச்சித் தகவல்!

729
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர் – மலேசியாவில் சபா மற்றும் கோலாலம்பூரில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கியுள்ளதாக உள்ளூர் காவல்துறை அறிக்கையொன்று பரவி வருகின்றது.

இதை தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரும் உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளையில், மிகவும் இரகசியமான இந்தத் தகவல் வெளியில் கசிந்தது குறித்தும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த மிரட்டல் மற்றும் நடவடிக்கைகள் குறித்து காவல்துறை தீவிரமாக கவனித்து வருவதாகவும், அவர்களைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காலிட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“அப்படியெல்லாம் நடக்கவிடமாட்டோம்” என்று காலிட் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 16-ம் தேதியிட்ட அறிக்கை ஒன்று சபா காவல்துறைத் தலைமையகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அபு சயாப் அமைப்பு, ஐஎஸ் அமைப்பு மற்றும் எம்என்எல்எப் அமைப்பு ஆகியவற்றுக்கிடையே கடந்த நவம்பர் 15-ம் தேதி ‘கூட்டம் நடந்ததாகவும், அதன் அடிப்படையில் காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் படி, சபாவில் 8 தற்கொலைப்படையைச் சேர்ந்த தீவிரவாதிகளும், கோலாலம்பூரில் 10 தீவிரவாதிகளும் உள்ளதாக அந்தத் தகவல் கூறுகின்றது.

சுலுவில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் மூன்று அமைப்புகளைச் சேர்ந்த 14 தலைவர்களோடு, அபு சயாப் அமைப்பைச் சேர்ந்த 50 உறுப்பினர்கள் எம்16 வகை துப்பாக்கிகள், பிஸ்டல்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவற்றுடன் கலந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதோடு, அமைப்புகளில் புதியவர்களைச் சேர்ப்பது, சபா, கோலாலம்பூரில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வது போன்ற திட்டங்களையும் அவர்கள் கலந்தாலோசித்ததாகக் கூறப்படுகின்றது.

சபா மற்றும் கோலாலம்பூரில் பதுங்கியுள்ள அந்த தற்கொலைப்படையினர் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகியவற்றில் இராணுவப் பயிற்சி எடுத்தவர்கள். அதேவேளையில், தேவையான நேரத்தில் தங்களது தலைவர்களின் கட்டளையைச் செயல்படுத்தவும் அவர்கள் தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.