Home Featured தமிழ் நாடு “பேசுனது நானு..நீக்குனது அவர” – ஜெயா நடவடிக்கை குறித்து பத்திரிக்கையாளர் கேலி!

“பேசுனது நானு..நீக்குனது அவர” – ஜெயா நடவடிக்கை குறித்து பத்திரிக்கையாளர் கேலி!

848
0
SHARE
Ad

Jayalalitha_AFP2சென்னை – பணியில் இருந்த காலத்திலும் சரி, ஓய்வு பெற்று அதிமுகவில் இணைந்த போதும் சரி, ஜெயாவின் அபிமானியாக அறியப்பட்டவர் முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ். நேற்று அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து  நீக்கப்பட்டதாக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவே அறிவித்தார்.

இதற்கான காரணம் குறித்து விசாரிக்கையில், எதிர்கட்சிகள் பரபரப்பை கிளப்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து, தனியார் தொலைக்காட்சி விவவாத மேடை ஒன்றில், தொலைபேசி வாயிலாக நட்ராஜ் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்தார். அதன் காரணமாக நீக்கப்பட்டார் என்று செய்திகள் வெளியாகின.  இது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள், நட்ராஜை தொடர்பு கொண்டு  விசாரிக்கையில், தான் எத்தகைய பேட்டியும் கொடுக்கவில்லை என்றும், இதில் ஏதோ குழப்பம் நடந்துள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில் தொலைக்காட்சிக்கு உண்மையாக பேட்டி கொடுத்திருந்த  மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன், பிரபல நாளிதழ் ஒன்றிற்கு இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், “தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று முன்தினம் (12-ம் தேதி) காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பான வெள்ள நிவாரணம் குறித்த அரசின் செயல்பாடுகளைப் பற்றி தொலைபேசியில் கருத்துக் கூறியது நான்தான். முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ் இல்லை.”

#TamilSchoolmychoice

“2004-ம் ஆண்டில் சுனாமி வந்த போது தமிழக அரசு செயல்பட்ட அளவுக்கு இந்த மழை வெள்ளம் வந்தபோது செயல்படவில்லை. கீழ்மட்ட அதிகாரிகள் முதல், உயர்மட்ட அதிகாரிகள் வரை ஒவ்வொருவரும் எதுவும் செய்ய முடியாமல் மேலிருந்து வரப்போகும் கண்ணசைவுக்காகவும், உதட்டசைவுக்காகவும் காத்திருந்தார்கள் என்று தொலைபேசி நேர்காணலில் நான் கூறினேன்.”

natraj_“எனது உரையாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே, திரையில் எனது படத்துக்குப் பதிலாக முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ் படத்தை ஒளிபரப்பினர். அதை பார்த்த நான், ‘எனக்கு பதிலாக தவறுதலாக முன்னாள் டிஜிபி படத்தைக் காட்டுகிறார்கள். அவர்மேல் ஏதும் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துவிடப்போகிறார்கள்’ என்று நண்பர்களிடம் ஆதங்கப்பட்டேன். அது போலவே இப்போது நடந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியும் தங்கள் தவறுக்காக, இருவரிடமும் வருத்தம் தெரிவித்துவிட்டதாம்.

இது ஒருபுறம் இருக்க, தற்போது ஜெயா நடந்த தவறுக்கு வருந்தி, நட்ராஜை அழைத்து மீண்டும் பொறுப்புகளை கொடுத்தாலும் சரி, கொடுக்காமல் நீக்கத்தை உறுதிபடுத்தினாலும் சரி, அடுத்த சில நாட்களுக்கு மிகக் கடுமையான விமர்சனங்களையும், கேலிப்பேச்சுக்களையும் சந்திக்க நேரிடும் என்பது மட்டும் தற்போது உறுதியாகிறது.