“எல்லாம் முடிந்துவிட்டது, நஜிப் மீது எந்த குற்றமும் இல்லை” என சட்டத்துறை சார்பில் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சுவிட்சர்லாந்து சட்டத்துறைத் தலைவர் மைக்கேல் லாபர் புதிய சந்தேகம் ஒன்றை நேற்று கிளப்பியுள்ளார்.
1எம்டிபி -ல் தொடர்புடைய நிதி ஒன்று தங்கள் நாட்டு நிதி நிறுவனங்களின் வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மலேசியாவிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக லாபர் நேற்று ‘த வால் ஸ்ட்ரீட் ஜார்னல்’ பத்திரிக்கைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், அதற்கான ஆதாரங்களையும் தாங்கள் கண்டறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, 1எம்டிபி விவகாரத்தில் சுவிஸ் சட்ட விதிமுறைகளை மீறி அங்கிருந்து மலேசிய அதிகாரிகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்த தங்களது விசாரணைக்கு, மலேசியா உதவ வேண்டும் என்று லாபர் இன்று வெளியிட்டுள்ள பொது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் (16.6 பில்லியன் ரிங்கிட்) நிதி சட்டவிதிகளை மீறி கையாடல் செய்யப்பட்டுள்ளதாக தாங்கள் சந்தேகிப்பதாக லாபர் தெரிவித்துள்ளார்.