Home Featured நாடு மலேசிய அரசின் திடீர் அறிவிப்பு ‘கண்துடைப்பு’ என்கிறது வங்கதேச அமைச்சு!

மலேசிய அரசின் திடீர் அறிவிப்பு ‘கண்துடைப்பு’ என்கிறது வங்கதேச அமைச்சு!

1240
0
SHARE
Ad
bs0310

கோலாலம்பூர் – வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ள மலேசிய அரசின் நடவடிக்கை ஒரு ‘கண்துடைப்பு’ தான் என்கிறது வங்காளதேச புலம்பெயர்ந்தோர் அமைச்சு.

தாக்கா டிரைபூன் (Dhaka Tribune) என்ற வங்கதேசப் பத்திரிக்கைக்கு புலம்பெயர்ந்தோர் அமைச்சின் செயலாளர் பெகும் சாம்சுந்தர் அளித்துள்ள தகவலில், இரு நாடுகளுக்கு இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி மலேசியா தொடர்ந்து அதன் திட்டத்தை செயல்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அது ஒரு கண்துடைப்பு தான். வெளிநாட்டினர் வேண்டாம் என்று கூறி சில தரப்பினரால் நாட்டில் எழுந்துள்ள நெருக்கடியை தணிக்கும் நோக்கில் மலேசிய அரசாங்கம் அவ்வாறு அறிவித்துள்ளது”

#TamilSchoolmychoice

“இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் படி வங்காளதேசம் இங்கிருந்து தொழிலாளர்களை மலேசியாவிற்கு அனுப்பி வைக்கும்” என்று ஷாம்சுந்தர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம், தாக்காவில் 1.5 மில்லியன் தொழிலாளர்களைக் கொண்டு வரும் வங்கதேசத்துடனான ஜி2ஜி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் மலேசிய மனிதவள அமைச்சர் ரிச்சர்டு ரியாட்.

எனினும், நேற்று மலேசிய துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி வெளியிட்ட அறிக்கையில், வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டு வரும் திட்டத்தை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று மலேசியா அரசாங்கம் எடுத்துள்ள முடிவு பற்றி தங்களுக்கு அதிகாரப்பூர்வமான அறிக்கை எதுவும் வரவில்லை என்று வங்கதேச அமைச்சு தெரிவிப்பதாக தாக்கா டிரைபூன் பத்திரிக்கை கூறுகின்றது.

இந்நிலையில், மலேசியாவில் தக்க ஆவணங்கள் இன்றி அகதிகளாக வாழ்ந்து வரும் ஏறக்குறைய 1 மில்லியன் தொழிலாளர்களை முறைப்படுத்தாமல் அரசாங்கம் இவ்வாறு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது குறித்து வங்கதேசத்திலும் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.