Home Featured தமிழ் நாடு வைகோ நாக்கில் சனி: மக்கள் நலக் கூட்டணியில் எழுந்தது அதிருப்தி!

வைகோ நாக்கில் சனி: மக்கள் நலக் கூட்டணியில் எழுந்தது அதிருப்தி!

685
0
SHARE
Ad

Vaikoசென்னை – நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் திமுக தலைவர் கருணாநிதியின் குலத்தொழிலைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்த வைகோவின் பேச்சுக்கு, மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ‘தேமுதிக கட்சியை உடைப்பதற்கு திமுகவின் துண்டுதலின்பேரில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை வைகோ விமர்சித்தார். அச்சமயம் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தேமுதிக எம்எல்ஏக்கள் தொடர்பாக அரசியலுக்கு அப்பாற்பட்டும், சாதீய தொழில் குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்புடையதல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சி எம்பி டி.கே.ரங்கராஜன் கூறும்போது, “வைகோ சொன்னது அரசியலுக்கு அப்பாற்பட்ட கருத்துக்கள்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார், “சாதி ரீதியான குறி வைத்து பேசுவது ஏற்புடையதல்ல’என்று கூறியுள்ளார்.

அக்கட்சியின் ஊடக தொடர்பாளர் வன்னி அரசு கூறுகையில், “குறிப்பிட்ட சாதியின் தொழிலை குறிவைத்து பேசுவது ஏற்புடையதல்ல. தலித்துகளை பறையடிக்கத்தான் வேண்டும் என்று சொன்னால் அதை ஏற்க முடியுமா. இது போன்ற கருத்துக்கள் சமூகத்தில் இல்லாத நிலை வேண்டும். இதை வைத்துக் கொண்டு மக்கள் நலக் கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று யாரும் கருத வேண்டாம்” என்று தெரிவித்துள்ளதாக ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.

எனினும், வைகோ பேச்சு குறித்து விஜயகாந்த் தரப்பில் இருந்து இதுவரை அறிக்கைகள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.