Home Featured தமிழ் நாடு மக்கள் நலக்கூட்டணி தோல்வியடையும் என எதிர்பார்த்தேன் – வைகோ அதிரடி!

மக்கள் நலக்கூட்டணி தோல்வியடையும் என எதிர்பார்த்தேன் – வைகோ அதிரடி!

598
0
SHARE
Ad

vaikoசென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி தோல்வி அடையும் என்று எதிர்பார்த்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழக தேர்தலில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி படுதோல்வி அடைந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டையில் டெபாசிட் இழந்தார்.

இந்நிலையில் இது குறித்து வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் தோல்வியை எதிர்பார்த்தேன். பிரச்சாரத்தின் கடைசி 3 நாட்களில் ஒரு சில மாற்றங்களை பார்த்தேன்.

#TamilSchoolmychoice

தேர்தல் பிரச்சாரத்தின் துவக்கத்தில் மக்களிடையே இருந்த எழுச்சி, ஆர்வம் குறைந்திருந்தது. 1964-ஆம் ஆண்டில் இருந்து பல தேர்தல்களை பார்த்தவன் நான். அதனால் மக்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியும்.

மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு எங்கள் கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அப்பொழுதே நான் கட்சியினரிடம் தெரிவித்தேன். நான் தோல்வியை எதிர்பார்த்து அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். கோவில்பட்டியில் ஜாதிக் கலவரத்தை தூண்டிவிட சதித் திட்டம் தீட்டினர்.

என்னால் வாக்காளர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று நினைத்தேன். அதனால் தேர்தலில் நிற்கவில்லை. நான் கோவில்பட்டியில் போட்டியிட்டிருந்தாலும் என்னை தோற்கடித்திருப்பார்கள்.

மக்கள் நலக் கூட்டணியின் வீழ்ச்சிக்கு பணமே காரணம். திமுகவும், அதிமுகவும் மறைமுக ஒப்பந்தம் செய்து கொண்டு அதன்படி அனைத்து இடங்களிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர்.

அந்த பணத்தை ஏழைகள் வாங்கியிருந்தால் கூட பரவாயில்லை. நடுத்தர வர்க்கத்தினரும், பணக்காரர்களும் கூட அந்த பணத்தை வாங்கியதை நினைத்தால் தமிழகத்தின் நிலை வெட்கப்படும் அளவுக்கு இருக்கிறது.

திமுகவை தோல்வி அடைய வைக்க நான் கருவியாகப் பயன்படுத்தப்பட்டதாக சொல்வதே திமுக தான். நான் 29 ஆண்டுகளாக திமுகவில் இருந்து கட்சிக்காக பாடுபட்டேன்.

நாட்டிலேயே கட்சி தலைவரை கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது நான் மட்டுமாகத் தான் இருக்கும். இதற்கு என்ன சொல்வது. அது பொறுப்பில்லாத குற்றச்சாட்டு என வைகோ பேட்டியளித்தார்.