புதுடில்லி – மலேசியாவுக்கு அண்மையில் வருகை தந்தபோது தனது சர்ச்சையான உரைகளால், முஸ்லீம் அல்லாதவர்கள் மத்தியில் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்த ஜாகிர் நாயக் (படம்) மீண்டும் சிக்கலில் மாட்டியிருக்கின்றார்.
இந்தியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஜாகிர் தற்போது சவுதி அரேபியாவில் உம்ரா புனிதப் பயணத்தில் இருப்பதாக நம்பப்படுகின்றது.
அவர் இந்தியா திரும்பும்போது கைது செய்யப்படலாம், அல்லது மற்றவர்கள் மீது மத விரோதம் கொள்ள வைக்கும் வகையிலான அவரது பிரச்சாரங்களுக்கும் அவர் நடத்திவரும் தொலைக்காட்சி அலைவரிசைக்கும் தடை விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆராய்ச்சி மையம் மூலம் பிரச்சாரம்
மத்திய மும்பை நகரின் டோங்ரி வட்டாரத்தில் ஒரு சிறிய அளவில்- ஆனால் இரகசியமானப் பின்னணியோடு இயங்கிவருகின்றது டாக்டர் ஜாகிர் நாயக் நிறுவிய இஸ்லாமிய ஆராய்ச்சி மையம் (Islamic Research Foundation). அவரால் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டது இந்த மையம்.
அத்துடன் ஜாகிரின் உரைகளை ‘பீஸ் டிவி’ (Peace Television Channel) என்ற தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பி வருகின்றது.
வங்காளதேசத் தாக்குதலில் கிடைத்த புலனாய்வுகள்படி, ரோஹன் இமிதியாஸ், நிப்ரான் இஸ்லாம், ஆகிய இருவரும் வழங்கிய வாக்குமூலத்தில் ஜாகிரின் உரையால் தாங்கள் தூண்டப்பட்டதாகவும், முகநூல் வழியாகவும், அவரது பீஸ் தொலைக்காட்சி உரைகளின் மூலமாகவும் அவரது தீவிர ஆதரவாளர்களாக இயங்கி வந்தோம் என்றும் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தியப் புலனாய்வுத் துறைகள் ஜாகிரின் நடவடிக்கைகள் குறித்து தங்களின் கவனத்தை ஆழமாகப் பதித்துள்ளன.
கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் ஜாகிர் தடை செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் இந்தியாவில் அவர் சுதந்திரமாக இயங்கி வருகின்றார்.