புதுடில்லி – மேக்சிஸ் நிறுவனம் இந்தியாவின் ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தை வாங்கிய விவகாரம் தொடர்பில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் சகோதரர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கக் கோரி, நீதிமன்ற மனு செய்திருக்கும் சிபிஐ எனப்படும் இந்திய அரசாங்கத்தின் மத்திய புலனாய்வுத் துறை, மலேசியக் கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணனுக்கு எதிராகவும் கைது ஆணை கோரி மனு சமர்ப்பித்துள்ளதாக, இந்தியத் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆனந்தகிருஷ்ணன் மலேசியாவிலேயே இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற நிலையை கடந்த பல ஆண்டுகளாக தக்கவைத்துக் கொண்டு வருகின்றார்.
மேக்சிஸ், அஸ்ட்ரோ ஆகிய மலேசிய நிறுவனங்களுக்கு எதிராகவும் சிபிஐ கைது ஆணை கோரி மனு செய்துள்ளது.
ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனம் கையகப்படுத்தியது தொடர்பில் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், சன் தொலைக்காட்சி அதிபர் கலாநிதி மாறன் ஆகியோருக்கும் எதிராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழக்கு நடத்தி வருகின்றது.
2-ஜி எனப்படும் மிகவும் பிரம்மாண்டமான ஊழல் குற்றச்சாட்டுகளின் ஒரு பகுதியாக மாறன் சகோதரர்களுக்கு எதிராக சிபிஐ வழக்குகள் தொடுத்துள்ளது.
ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான சிவசங்கரன் என்பவரிடமிருந்து மேக்சிஸ் அந்நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் தொடர்பில், மாறன் சகோதரர்கள் ஏறத்தாழ 451 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.