Home Featured தமிழ் நாடு “பொதுவாழ்விலிருந்து விலகுகின்றேன்! சசிகலாவைத் தெரியாது” – நாஞ்சில் சம்பத் அதிரடி!

“பொதுவாழ்விலிருந்து விலகுகின்றேன்! சசிகலாவைத் தெரியாது” – நாஞ்சில் சம்பத் அதிரடி!

854
0
SHARE
Ad

nanjil_11073

சென்னை – சசிகலாவுக்கு எதிராக எந்த ஒரு குரலுமே ஒலிக்கவில்லையே என அரசியல் பார்வையாளர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்க, அதிமுக மேடைகளிலும், அதிமுக சார்பான தொலைக்காட்சி விவாத அரங்குகளிலும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த ஒரு குரல் – ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அடங்கி ஒடுங்கியிருந்த ஒரு குரல் – அதிரடியாக சசிகலாவுக்கு எதிராக முழங்கத் தொடங்கியிருக்கின்றது.

அவர்தான் நாவன்மைக்குப் பிரசித்தி பெற்ற நாஞ்சில் சம்பத்.

#TamilSchoolmychoice

முதல் கட்டமாக ஜெயலலிதா தனக்கு வழங்கிய இன்னோவா காரை எடுத்துச் சென்று அதிமுக தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை  விட்டு விட்டு வந்தவர், அதன் காரணமாக உடனடியாக ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகியுள்ளார்.

அதன் பின்னர் அதிரடியாக, “அதிமுகவில் இருந்து இன்னும் விலகவில்லை, இருப்பினும் பொதுவாழ்வில் இருந்து விலகுகின்றேன்” என அறிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுகவில் இருந்து அவர் கூடிய விரைவில் விலகி விடுவார் என்கின்றன ஊடகங்கள்.

அவரது அடுத்த கட்சி குறி திமுக என்றும் – அவரது தலைவர் இனி மு.க.ஸ்டாலின் – என்றும் ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதே வேளையில் நேற்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சம்பத் “மறைந்த ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இதுவரை மௌனம் காத்து வந்தேன். கட்சியில் நீடிப்பது குறித்தோ, விலகுவது குறித்தோ இதுவரை முடிவெடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

சசிகலா குறித்து சம்பத்திடம் கேட்கப்பட்டபோது “எனக்கு அவர்களைப் பற்றி எதுவும் தெரியாது. அவர்களை நான் பார்த்ததும் இல்லை. பழகியதும் இல்லை. அவரைச் சந்தித்ததும் இல்லை” என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளதால் பொங்கலுக்குப் பிறகு எந்தக் கட்சியில் சேருவது – அவரது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன – என்பதும் தெளிவாகும் எனத் தெரிகிறது.