Home Featured நாடு கேஎல்ஐஏ 2-ல் இரு பெண்களால் விஷம் தெளித்துக் கொல்லப்பட்ட கிம் ஜோங் நம்!

கேஎல்ஐஏ 2-ல் இரு பெண்களால் விஷம் தெளித்துக் கொல்லப்பட்ட கிம் ஜோங் நம்!

932
0
SHARE
Ad

kim-jong-nam-0கோலாலம்பூர் – கடந்த திங்கட்கிழமை காலை 9 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல் மரணமடைந்த நபர் வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன்னின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம் தான் என்பதை மலேசியக் காவல்துறை உறுதிப்படுத்தியது.

இது குறித்து சிலாங்கூர் குற்றப்புலனாய்வுத் துறை மூத்த துணை ஆணையர் ஃபாட்சில் அகமட் வெளியிட்ட அறிக்கையில், திங்கட்கிழமை காலை 9 மணியளவில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ 2) அவர் விஷம் தெளித்துக் கொல்லப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

“தன்னை யாரோ பிடித்துக் கொண்டு முகத்தில் ஏதோ ஒரு திரவத்தை வீசியதாக, புறப்பாடு மையத்தின் வரவேற்பு மேடையில் இருந்தவர்களிடம் கிம் ஜோங் நம் புகார் அளித்திருக்கிறார்.”

#TamilSchoolmychoice

“அப்போது சில நிமிடங்களில் அவருக்கு உயிர் போகும் அளவிற்கு தலைவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரை விமான நிலையத்தில் இருக்கும் மருத்துவ மையத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். அங்கு லேசான வலிப்பும் ஏற்பட்டிருக்கிறது.”

“பின்னர், அவரை அவசர ஊர்தி மூலம் புத்ராஜெயா மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, போகும் வழியிலேயே உயிரிழந்திருக்கிறார்” என்று ஃபாட்சில் தெரிவித்தார்.

இதனிடையே, கிம் ஜோங் நம் மீது அந்த திரவத்தைத் தெளித்தது இரு பெண்கள் என காவல்துறை சந்தேகிக்கிறது.

அதன்படி, கிம் ஜோங் நம் மலேசியாவிற்கு வந்ததற்கான காரணம் என்ன? அவர் எத்தனை நாட்கள் இங்கிருந்தார்? யார் யாரைச் சந்தித்தார்? போன்ற தகவல்களை அறிய காவல்துறை விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.