Home கலை உலகம் நடிகர் சங்கத் தேர்தலில் குதிக்கத் தயாராகும் விஷால்!

நடிகர் சங்கத் தேர்தலில் குதிக்கத் தயாராகும் விஷால்!

529
0
SHARE
Ad

vishal vs sarathkumarசென்னை, நவம்பர் 24 – நடிகர் சரத்குமார் தலைமையேற்றிருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. விஷாலை நீக்குவோம் என சரத்குமார் நேரடியாகவே மிரட்ட,  நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறி பதிலடியாக மேலும் பரபரப்பு கூட்டியுள்ளார் விஷால்.

இனிமேல் நடிகர் சங்கம் மீது அவதூறாக பேசிக்கொண்டே இருந்தால், சங்கத்தில் இருந்து விஷால் நீக்கப்படுவார் என்று சரத்குமார் அண்மையில் திருச்சியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நடிகர் விஷால் “நடிகர் சங்கம் குறித்து நான் எப்போது தவறாக பேசினேன்? முதலில் எங்கே பேசினேன் என்று கூற வேண்டும்.  துணைத் தலைவர் காளை என்னைப் பார்த்து நாய் என்று கூறி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளேன். இப்போது என்னை நடிகர் சங்கத்தை விட்டு நீக்கி விடுவேன் என்று கூறுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டி

“பொதுக்குழுவிற்கு வரவில்லை என்கிறார்கள், வருடத்திற்கு ஒரு முறை பொதுக்குழு கூடுகிறது. என்னைக் கூப்பிட்டார்கள். நான் போய் கடந்த பொதுக்குழுவில் கலந்து கொண்டேன். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் கட்டிடம் தொடர்பாக பொதுக்குழுவில் பேசிய போது, ஜனவரிக்குள் வழக்கு முடிந்து விடும். அதற்கு பிறகு கண்டிப்பாக கட்டிவிடலாம் என்று என்னிடம் தெரிவித்தார். இப்போது மாற்றி பேசுகிறார்” என்றும் விஷால் சரத்குமாரைச் சாடியுள்ளார்.

“என்னைப் பொறுத்தவரை நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் நல்லா இருக்க வேண்டும். அதற்கு ஒரு கட்டிடம் வேண்டும் என்று கேட்கிறேன். அதைக் கட்டுவதற்கு இளம் தலைமுறை நடிகர்கள் அனைவரும் இணைந்து ஒரு படத்தை சம்பளம் வாங்காமல் நடித்து தருகிறோம் என்று சொல்கிறேன்.  இவ்வாறு நான் கேட்பது தவறா? கேட்டதற்கு நீக்கப் போகிறேன் என்று சொல்கிறார். நடிகர் சங்கத்தைப் பற்றி பொதுக்குழுவில் மட்டும் தான் பேச வேண்டும். வெளியே எல்லாம் பேசக் கூடாது என்று சொன்னார். தற்போது அவரே பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சங்கப் பிரச்சனைப் பற்றி பேசியிருக்கிறார். இது எந்த விதத்தில் நியாயம்?  இனிமேல் நான் இந்தப் பிரச்சனையை விடப் போவதில்லை. துணைத் தலைவர் என்னை நாய் என்று கூறுவதற்கு முந்தைய நாள் வரை எனக்கு நடிகர் சங்கத் தேர்தலில் நிற்கும் எண்ணமில்லை”.

“ஆனால், என்றைக்கு நாய் என்றாரோ அன்றே முடிவு செய்துவிட்டேன். நான் நடிகர் சங்கத் தேர்தலில் நிற்பேன். ஆனால் தலைவர் பதவியில் எல்லாம் நிற்கமாட்டேன். நாசர், பொன்வண்ணன், ராஜேஷ் உள்ளிட்ட நாங்கள் அனைவருமே தேர்தலில் நிற்போம். இதை பதவி மோகம் என்பது தவறு. நடிகர் சங்க கட்டிடத்திற்கு இன்னும் பூமி பூஜையே நடக்கவில்லை. அதற்குள் 170 கோடி, 240 கோடி வருமானம் கிடைக்கும் என்கிறார்கள்” என்றும் விஷால் கூறியுள்ளார்.

சரத்குமாரின் மகள் வரலட்சுமியுடன் விஷால் கட்டியணைத்தபடி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையப் பக்கங்களில் வெளியாகி, தமிழகப் பத்திரிக்கைகளில் உலா வந்து, “உங்கள் இருவருக்கும் இடையில் காதலா” என பத்திரிக்கையாளர்கள் கேள்விகளால் இருவரையும் ஒருபுறம் குடைந்தெடுத்துக் கொண்டிருக்க, இன்னொரு புறத்திலோ, சரத்குமார்-விஷால் இருவருக்கும் இடையிலான மோதல் வலுத்துக்கொண்டே போகிறது.