Home நாடு கேஎல்ஐஏ 2 குறைகள்: ஏர் ஏசியா தொடர்ந்து எல்சிசிடி-ல் இயங்கும்!

கேஎல்ஐஏ 2 குறைகள்: ஏர் ஏசியா தொடர்ந்து எல்சிசிடி-ல் இயங்கும்!

617
0
SHARE
Ad

KLIA2கோலாலம்பூர், ஏப்ரல் 2 – வரும் மே மாதம் 9 ஆம் தேதிக்குப் பிறகும் ஏர் ஏசியா மற்றும் ஏர் ஏசியா எக்ஸ் ஆகியவற்றின் இயக்கங்கள் குறைந்த கட்டண விமான நிலையத்திலேயே (Low cost carrier terminal – LCCT) தான் தொடரும் என ஏர் ஏசியா அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரீன் ஓமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,”கேஎல்ஐஏ 2 அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டால் மட்டுமே நாங்கள் மாற்றம் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கேஎல்ஐஏ 2 அனைத்துலக விமான நிலையத்தின் தயார் நிலை குறித்து அண்மையில் இக்ராம் ப்ரீமியர் கன்சல்டிங்ஸ் நடத்திய ஆய்வில், டேக்ஸிவழி மற்றும் விமானம் ஓடுபாதை ஆகியவற்றில் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

“இந்த பிரச்சனைகள், நாளொன்றுக்கு சுமார் 400 விமானங்களை இயக்கும் ஏர் ஏசியா போன்ற மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் விமானங்களின் இயக்கங்களை சீர்குலைக்கும். குறைந்தபட்சம் ஏர் ஏசியாவின் 70 விமானங்களாவது விமான நிலையத்தில் நிற்கும்” என்றும் ஐரீன் குறிப்பிட்டுள்ளார்.

கேஎல்ஐஏ 2 க்கு ஏர் ஏசியா மாற்றம் செய்வதற்கு முன் இது போன்ற பிரச்சனைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்தே தீரும். காரணம் இது போன்ற பிரச்சனைகள் தான் மிகப் பெரிய விமான விபத்துக்களுக்கு காரணமாகின்றன என்றும் ஐரீன் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இன்னும் சில முக்கிய வணிகம், இயக்கம் மற்றும் ஒப்பந்தம் சார்ந்த விவகாரங்கள் குறித்தும் ஏர் ஏசியா மற்றும் மலேசிய விமான நிலைய நிறுவனத்திற்கிடையில் (Malaysia Airports Holdings Bhd – MAHB) பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஐரீன் தெரிவித்தார்.

அண்மையில், நாட்டின் துணை போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோ அப்துல் அஸீஸ் கப்ராவி வெளியிட்ட அறிக்கையில், கேஎல்ஐஏ 2 அனைத்துலக விமான நிலையம் திறக்கப்படுவதை முன்னிட்டு, குறைந்த கட்டண விமான நிலையம் (LCCT) இந்த ஆண்டு (2014) மே 9 ஆம் தேதியோடு மூடப்படும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.